Bihar Election Result: பீகார் தேர்தல் முடிவுகள் - வாக்கு எண்ணிக்கை, நிதிஷ் Vs தேஜஸ்வி, ஆட்சி மாற்றமா? ஏமாற்றமா?
Bihar Election 2025 Result: பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Bihar Election 2025 Result: பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகளின்படி, ஆட்சி மாற்றம் நிகழுமா? அல்லது எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றம் கிடைக்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தல்:
பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. அதன் முடிவில் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? அல்லது எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றமே நிலவுமா? என்பதை அறிய ஒட்டுமொத்த நாடுமே காத்திருக்கிறது. 243 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில், பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் காலை 8 மணியளவில் தொடங்க உள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. கடந்த தேர்தலை காட்டிலும் 9 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருப்பதும், பெண்கள் அதிகளவில் வாக்களித்து இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள்:
பீகாரில் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் முறையே 65.08 மற்றும் 68.76 சதவிகித வாக்குகள் பதிவாகின. ஒட்டுமொத்தமாக 66.9 சதவிகித வாக்குகள் பதிவாகி, பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத புதிய உச்சம் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களை அமைத்துள்ளது. அவை 24 மணி நேரமும் செயல்படும் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையத்துடன் பாதுகாக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களும் 14,000 பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆட்சி மாற்றமா? ஏமாற்றமா?
தேர்தலுக்கு பிந்தைய பெரும்பான்மையான கருத்து கணிப்புகள், நிதிஷ்குமார் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவே அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தன. தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது இடம் பிடிக்கவே அதிக வாய்ப்புள்ளதாகவும், இதற்கு பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி வாக்குகளை பிரிப்பது முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், அண்மைக்காலங்களில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் பொய்த்துபோவதால், பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும் எனவும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன. கடந்த காலங்களில் ஒவ்வொருமுறை கூடுதலாக 5 சதவிகித வாக்குகள் பதிவானபோதும், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிதிஷ்குமார் Vs தேஜஸ்வி
பீகாரில் சட்டமன்ற உறுப்பினராக கூட இல்லாத நிதிஷ்குமார், மேலவை உறுப்பினராக இருந்தபடியே, பல்வேறு கூட்டணிகளை மாற்றி கடந்த 20 ஆண்டுகளாக முதலமைச்சராக நீடித்து வருகிறார். வயது மூப்பு, அவரது நீண்ட கால ஆட்சியின் மீதான அதிருப்தி ஆகியவை இந்த தேர்தலில் வெளிப்படும் என கருதப்படுகிறது. அதேநேரம், மாநிலத்தின் இளம் மற்றும் நம்பிக்கைக்குரிய தலைவராக தேஜஸ்வி யாதவ் உருவெடுத்துள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், அடுத்த முதலமைச்சராக யாரை எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கும் பெரும்பாலானோர் தேஜஸ்வி யாதவின் பெயரையே குறிப்பிட்டுள்ளனர். இதனால், பீகாரின் அடுத்த முதலமைச்சர் யார்? என்ற கேள்விக்கான பதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





















