Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக-காங்., .. பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
AIADMK BJP Alliance: அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கப்போவதில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

AIADMK BJP Alliance: அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கப்போவதில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் பங்கு கேட்கப்போவதில்லை - நயினார் நாகேந்திரன்
கோவையில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய நயினார் நாகேந்திரன், திமுகவிடம் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்டு வருகிறது. முதலமைச்சர் ஆட்சியில் பங்கு இல்லை என கூறிவிட்டார். ஆனால், அதிமுகவிடம் பாஜக ஆட்சியில் பங்கு மட்டும் அல்ல எதையும் கேட்கப்போவதில்லை. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே இலக்கு. 520 பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் பிரதமர் மோடி” என தெரிவித்துள்ளார்.
மல்லுக்கட்டும் திமுக - காங்கிரஸ்:
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை வேகமெடுத்துள்ளது. அதேநேரம், முன் எப்போதும் இல்லாத அளவில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் மிக தீவிரமாக இந்த கோரிக்கையை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று தனியார் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழகத்திற்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஒத்துவராது. இது கூட்டணியை உடைக்க சிலர் மேற்கொள்ளும் சதி” என குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மக்கள் முடிவு செய்வார்கள் . கூட்டணி ஆட்சியா்? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை . 2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது காங்கிரஸின் தவறு. தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” என குறிப்பிட்டு இருந்தார்.
கூட்டணியை வலுப்படுத்தும் பாஜக..
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே ஆட்சி அதிகாரம் பங்கீடு காரணமாக புகைச்சல் நிலவி வரும் நிலையில், தங்களது கூட்டணியில் எந்தவித பிளவும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என நயினார் நாகேந்திரன் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணியிலும் குழப்பம் நிலவுவதாக கூறப்படும் நிலையில், அவரது இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.





















