UGC: எச்சரிக்கை; இந்தியாவில் 32 போலி பல்கலைக்கழகங்கள்; எங்கு முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? யுஜிசி அதிர்ச்சி தகவல்!
UGC Fake Universities: போலி பல்கலைக்கழக எச்சரிக்கை: டெல்லியில் முதலிடம்! தமிழ்நாட்டில் என்ன நிலை? UGC வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் 32 போலி பல்கலைக்கழகங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் டெல்லி 12 இடங்களோடு முதலிடம் வகிப்பதாக யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதா என்று காணலாம்.
இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களைக் கண்காணித்து நெறிப்படுத்தும் அமைப்பு பல்கலைக்கழக மானியக் குழு. இது யுஜிசி என்றும் அழைக்கப்படுகிறது.
32 போலி கல்வி நிறுவனங்கள்
யுஜிசி தற்போது நாடு முழுவதும் செயல்படும் அங்கீகாரமற்ற ‘போலி’ பல்கலைக்கழகங்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 32 கல்வி நிறுவனங்கள் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்தத் தகவல் மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யுஜிசி வெளியிட்டுள்ள இந்தத் தரவுகளின்படி, தேசியத் தலைநகரான டெல்லியில்தான் அதிகப்படியான போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்கு மட்டும் மொத்தம் 12 கல்வி நிறுவனங்கள் போலியானவை என்று யுஜிசி சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் எப்படி?
டெல்லியைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் 4 போலி பல்கலைக்கழகங்களும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 2 பல்கலைக்கழகங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் அங்கீகாரமற்ற பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் எந்த பல்கலைக்கழகமும் போலியாகச் செயல்படவில்லை.
கர்நாடகா
சர்வ பாரதிய சிக்ஷா பீடம் (Sarva Bharatiya Shiksha Peeth), தும்கூர்
குளோபல் மனித அமைதி பல்கலைக்கழகம் (Global Human Peace University), பெங்களூரு
கேரளா
தீர்க்கதரிசன மருத்துவத்திற்கான சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் (International Islamic University of Prophetic Medicine -IIUPM), கோழிக்கோடு
செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம்
புதுச்சேரி
உஷா லட்சுமணன் கல்வியியல் கல்லூரி (Usha Latchumanan College of Education)
ஸ்ரீ போதி உயர் கல்வி நிறுவனம் (Sree Bodhi Academy of Higher Education)
பட்டங்கள் செல்லாது
யுஜிசி சட்டம் 1956-ன் படி, நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மட்டுமே மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்க முடியும்.
ஆனால், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 32 நிறுவனங்களுக்கும் அத்தகைய அதிகாரம் ஏதுமில்லை. எனவே, இந்த நிறுவனங்களில் படித்துப் பெறப்படும் இளநிலை, முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புக்கான சான்றிதழ்கள் மற்றும் பட்டங்கள் செல்லுபடியாகாது.
அரசு வேலைவாய்ப்புக்கோ அல்லது வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கோ இந்தச் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று யுஜிசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு எச்சரிக்கை
ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடைபெறும் சமயத்தில், மாணவர்கள் ஏமாறாமல் இருக்க யுஜிசி இத்தகைய பட்டியலை வெளியிடுவது வழக்கம். பல நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு மாணவர்களை ஈர்க்கின்றன. எனவே, கல்லூரியில் சேரும் முன்பாக அந்த நிறுவனம் யுஜிசி-யின் அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை www.ugc.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறு மாணவர்களும் பெற்றோர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
























