TNPSC தேர்வர்களே.. மே 28தான் கடைசி; அதுக்குள்ள இதை செஞ்சிடுங்க- டிஎன்பிஎஸ்சி அலர்ட்!
சரிபார்ப்புக்குப் பின்னர், சில சான்றிதழ்கள் / ஆவணங்கள் முழுமையாக/ சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் / குறைபாட்டுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது- டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் VA பணிகளில் அடங்கிய பதவிகளுக்குத் தேர்வான நபர்கள், மே 28ஆம் தேதிக்குள் சான்றிதழ்கள், ஆவணங்களை சரியாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம், நிதித் துறைகளில் காலியாக உள்ள உதவிப்பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப் 5 A தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுக்கான சான்றிதழ் பதிவேற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 16/2025, நாள் 07.10.2025-இல் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – குரூப் VA பணிகளில் அடங்கிய தலைமைச் செயலகத் துறைகளில் (சட்டம் மற்றும் நிதித் துறைகள் நீங்கலாக / நிதித் துறைகள்) உள்ள உதவியாளர் / உதவிப் பிரிவு அலுவலர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
சில சான்றிதழ்களில் குறைபாடுகள்
சரிபார்ப்புக்குப் பின்னர், சில சான்றிதழ்கள் / ஆவணங்கள் முழுமையாக/ சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் / குறைபாட்டுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய தேர்வர்கள் 19.05.2026 முதல் 28.05.2026 வரை (இரவு 11.59 மணிக்குள்) விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை /ஆவணங்களை மீள் பதிவேற்றம் செய்ய / குறைகளை சரிசெய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தகவல்
மேற்படி தேர்வர்களின் பதிவெண்களைக் கொண்ட பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான குறிப்பாணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவல், அத்தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல், ஆகியவற்றின் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தேர்வர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை / ஆவணங்களை தேர்வாணைய இணையதளத்தில் அவர்களுடைய ஒருமுறை பதிவுக்கணக்கின் (OTR Account) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
— TNPSC (@TNPSC_Office) May 19, 2026
விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில், அத்தகைய தேர்வர்களின் உரிமை கோரல் (claim) / விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















