TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இன்னும் சில நாள்தான்- டிஎன்பிஎஸ்சி அழைப்பு-எதற்கு?
டிஎன்பிஎஸ்சி சார்பில் சில குரூப் 4 தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாக / சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்கள், சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய செப்டம்பர் 5ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்:01/2024, நாள்: 30.01.2024 இன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -IV (தொகுதி -IV பணிகள்) உள்ள வனக் காவலர் மற்றும் வனக் காப்பாளர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாக / சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
செப்.5 கடைசி
எனவே, இத்தகைய தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக 30.08.2025 முதல் 05.09.2025 இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறு பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இத்தகவல் அத்தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே. அத்தேர்வர்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு தளம் (OTR) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உரிமை கோரல் விண்ணப்பம் நிராகரிப்பு
அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத தேர்வர்களின் உரிமை கோரல் (claim)/ விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாடு அலுவலர் சண்முக சுந்தரம் தெரிவித்து உள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு அண்மையில் நடைபெற்றது. இந்தத் தேர்வு ஒப்பீட்டளவில் கடினமாக இருந்ததாகத் தேர்வர்கள் தெரிவித்து இருந்தனர். அலுவலக இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணி இடங்களை நிரப்ப ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/






















