![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN RTE Admission: தனியார் பள்ளிகளில் தொடங்கியது குலுக்கல் முறையில் இலவச மாணவர் சேர்க்கை!
இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் மாணவர்களை இலவசமாகச் சேர்க்கலாம்.
![TN RTE Admission: தனியார் பள்ளிகளில் தொடங்கியது குலுக்கல் முறையில் இலவச மாணவர் சேர்க்கை! TN RTE Admission 2022 started Tamil Nadu Private School Free Admission TN RTE Admission: தனியார் பள்ளிகளில் தொடங்கியது குலுக்கல் முறையில் இலவச மாணவர் சேர்க்கை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/30/00615d36504a063754a1ca9713c3dbc1_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் மாணவர்களை இலவசமாகச் சேர்க்கலாம். இதில் அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், குலுக்கல் முறையில் சேர்க்கை தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ சட்டம்- RTE) சிறுபான்மையினர் பள்ளிகள் அல்லாத, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படிக்க சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவினங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசே வழங்கி வருகிறது.
2011 முதல் தமிழகத்தில்
இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. நாடு முழுவதும் 2010-ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழக அரசு கடந்த 2011ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தியது.
இந்த 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள், எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பது தொடர்பான விவரங்களைப் பொதுவெளியில் தனியார் பள்ளிகள் அறிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோர் மத்தியில் பரவலாக எழுந்தது. செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே சிறப்பு ஒதுக்கீட்டில் இடம் கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பம்
இந்த சூழலில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை 2017-ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 2022-2023-ம் கல்வியாண்டில் மே 25-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.
சட்டப்படி சேர்க்கை கோரும், குழந்தைகளின் பெற்றோர் பள்ளி கல்வித்துறையின் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தனர். அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால் பெற்றோருக்கு ஒப்புகை சீட்டை வழங்கப்பட்டது.
விண்ணப்பங்களைப் பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம். இதுதவிர, முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆர்டிஇ சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர மொத்தம் 1,42,175 பேர் விண்ணப்பித்துள்ளனர். தனியார் பள்ளிகளில் உள்ள 1.10 லட்சம் இடங்களில் சேர 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்தது.
விண்ணப்பித்த பெற்றோர்கள் முன்னிலையில், குலுக்கல் முறை தேர்வு இன்று (மே 30-ம் தேதி) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சேர்க்கை இன்று தொடங்கியது.
இதற்கிடையே ஆர்டிஇ சட்டத்தில் குறிப்பிட்டுள்ள இடங்களைக் காட்டிலும் குறைவான இடங்களே ஆன்லைனில் காட்டப்படுவதாகப் பெற்றோர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)