![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
வீட்டிற்கு வந்த மின்சாரம்; 2 குழந்தைகளின் கண்களில் வெளிச்சம் - கனவை நனவாக்கிய ஆட்சியருக்கு மக்கள் நன்றி
வீட்டில் மின் இணைப்பை பார்த்தவுடன் அந்த 2 குழந்தைகளின் கண்களில் மகிழ்ச்சி தெரிந்தது. அந்தப் பகுதி சமூக ஆர்வலர்கள் உடனடியாக அந்த வீட்டிற்கு தேவையான மின்விசிறி போன்ற உபகரணங்களையும் வழங்கி வருகின்றனர்.
![வீட்டிற்கு வந்த மின்சாரம்; 2 குழந்தைகளின் கண்களில் வெளிச்சம் - கனவை நனவாக்கிய ஆட்சியருக்கு மக்கள் நன்றி Thoothukudi electricity came house the light in the eyes of the two children the people who say good things to the Collector TNN வீட்டிற்கு வந்த மின்சாரம்; 2 குழந்தைகளின் கண்களில் வெளிச்சம் - கனவை நனவாக்கிய ஆட்சியருக்கு மக்கள் நன்றி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/14/8206022b8d120fe168bba2da72083ee61678787433880109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் நகரம் 13ஆவது வார்டு வீரஇடக்குடித்தெருவை சேர்ந்த ஆறுமுகம்- லெட்சுமி தம்பதியின் மகள் பேச்சித்தாய். இவர், தற்போது பிளஸ் 2 வகுப்பு படித்து வருகிறார். பேச்சிதாயின் சகோதரர் ஐயப்பன் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு மின் இணைப்பு இல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டு படித்து வந்தனர்.
லட்சுமி அந்தப் பகுதியில் முறுக்கு வியாபாரம் செய்து இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறார். ஆனால் சிறு வயதில் இருந்தே அந்த குழந்தைகள் மின்சாரம் இல்லாமல் வீட்டில் உள்ள மண்ணெண்ணெய் விளக்கை வைத்து தான் படித்து வந்துள்ளனர். இதற்கிடையில் அவருடைய வீட்டிற்கு வழக்கறிஞர் ஒருவர் முறுக்கு வாங்க சென்றுள்ளார்.
அப்போது இரண்டு குழந்தைகளும் மண்ணெண்ணெய் விளக்கில் இருந்து படிப்பது கண்டு இந்த காலத்தில் இப்படி ஒரு சூழ்நிலையில் படித்து வருகிறார் என்று அதை வீடியோவாக தனது போனில் எடுத்து இணையத்தில் மற்றும் அனைத்து whatsapp குரூப்பில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் அனுப்பப்பட்டு அவர் கவனத்திற்கு சென்றது. இதை பார்த்தவுடன் உடனடியாக சாத்தான்குளம் வட்டாட்சியர் தங்கையாவிற்கு தொடர்பு கொண்டு உடனடியாக அந்த வீட்டிற்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, சாத்தான்குளம் வட்டாட்சியர் தங்கையா மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா ஆகியோர் உடனடியாக லெட்சுமியின் வீட்டுக்குச் சென்று பார்வையிட்டனர். மேலும், உடனடியாக, தமிழ்நாடு மின்வாரியத்தில் உரிய முறையில் விண்ணப்பம் செய்து மின் இணைப்பு பெறுவதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்தனர்.
இதற்கிடையே, லெட்சுமி கஷ்டமான சூழலில் இருப்பதாக அறிந்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மின் இணைப்பு பெறுவதற்கான வைப்புத்தொகையை தனது விருப்ப நிதியில் இருந்து செலுத்தினார். உத்தரவின் பெயரில் வட்டாட்சியர் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் அந்த வீட்டிற்கு வந்து முழுமையாக வயரிங் செய்து புதிய மின் மீட்டரை மாற்றி 3 மணி நேரத்தில் மின்சாரத்தை வழங்கினர். வீட்டில் மின் இணைப்பை பார்த்தவுடன் அந்த இரண்டு குழந்தைகளின் கண்களில் மகிழ்ச்சி தெரிந்தது. அந்தப் பகுதி சமூக ஆர்வலர்கள் உடனடியாக அந்த வீட்டிற்கு தேவையான மின்விசிறி போன்ற உபகரணங்களையும் வழங்கி வருகின்றனர். மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குச் சென்றதால் ஒரே நாளில் மின்சாரம் வழங்கியது மாவட்ட ஆட்சியரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக லெட்சுமி கூறும்போது, மின் இணைப்பு கேட்டு கோரிக்கை விடுத்து, ஒரே நாளில் அதுவும், தனது விருப்ப நிதியில் இருந்து வைப்புத்தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்றுத்தந்து தனது மகளின் கல்விக்கு ஒளியூட்டிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)