School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
School Reopening in Tamilnadu: வெயில் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பை மேலும் சில நாட்களுக்குத் தள்ளி வைக்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

கடந்த மே மாதத்தில் இருந்த வெப்பத்தைவிட ஜூன் மாதத்தில் வெயில் கடுமையாகக் கொளுத்தி வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு மேலும் சில நாட்களுக்குத் தள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
நாளை பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் படிக்கும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து, நாளை (ஜூன் 4 ஆம் தேதி) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.
எனினும் தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் வெப்பமும் அனல் காற்றும் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் வெப்பம் கொளுத்தி வருகிறது. கடந்த மே மாதத்தில் இருந்த வெப்பத்தைவிட, ஜூன் பிறந்தபிறகும் வெப்பம் அதீதமாக உள்ளது.
ஏற்கெனவே தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு
சில மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் கோடையின் கடுமை குறைந்தபாடில்லை. ஏற்கெனவே ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கையை அடுத்து, ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.
திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டால் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக மாணவர்களுக்கு நீரிழப்பு, தலைச்சுற்றல், மயக்கம், உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே பள்ளிகள் திறப்பை மேலும் சில நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
குறைந்தபட்சம் பள்ளிகள் திறக்கப்படும் வியாழன் (ஜூன் 4), வெள்ளி ஆகிய நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டால், வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக் கிழமைக்குப் பிறகு ஜூன் 8ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்புக்குத் திட்டமிடலாம் என்று கல்வியாளர்கள் தரப்பில் ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.
முதலுதவிக்கான வழிகாட்டுதல் அவசியம்
பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, அங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாணவர்களின் உடல்நிலை மாற்றங்களை உடனடியாகக் கண்டறிந்து தேவையான முதலுதவி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















