Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா படித்தது அரசுப் பள்ளியில் அல்ல, விருதுநகரில் 1910-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷத்திரிய மகளிர் பள்ளியில் படித்தவர் கீர்த்தனா.

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, விருதுநகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ள நிலையில் அவர் படித்தது அரசுப் பள்ளி அல்ல என்றும் வீடியோவை அவரின் குழுவே எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் கீர்த்தனா பொறுப்பேற்றதில் இருந்தே சர்ச்சைகள் அவரைச் சுற்றியடித்து வருகின்றன. மாற்றுத் திறனாளிகளை ஊனமுற்றோர் என்று குறிப்பிட்டது, தனியார் ஊடகப் பேட்டியில் ஆணையரிடம் இரவு 10 மணிக்கு விளக்கு எரியவில்லை என்று செய்தி அனுப்புவேன் என்று கூறியது, முதலீடு செய்ய வாருங்கள் என்று ரீல்ஸ் வெளியிட்டது என பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறார் அமைச்சர் கீர்த்தனா.
இந்த நிலையில் விருதுநகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட அவர், ஒரு குழந்தையின் ஆங்கிலப் புலமையைப் பரிசோதிக்கிறேன் என்ற பெயரில் செய்த செயல்கள் இணையத்தில் அவருக்கு எதிரான விமர்சனமாகத் திரும்பின. எதிர்க் கட்சியினர் மட்டுமல்லாமல், பலரும் அமைச்சர் கீர்த்தனாவை விமர்சித்தனர்.
நானே ஒரு அரசுப் பள்ளி மாணவி
இந்த நிலையில், ’’நானே ஒரு அரசுப் பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்’’ என்று அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்திருந்தார்.
அரசுப் பள்ளி அல்ல
எனினும் இதுகுறித்து விசாரித்தபோது, அமைச்சர் கீர்த்தனா படித்தது அரசுப் பள்ளியில் அல்ல, அரசு உதவி பெறும் பள்ளியில் என்னும் தகவல் கிடைத்தது. விருதுநகரில் 1910-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷத்திரிய மகளிர் பள்ளியில் படித்தவர் கீர்த்தனா. மாங்கா மச்சி என்றும் இந்தப் பள்ளி அழைக்கப்படுகிறது.
அதேபோல, ’’பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள்’’ என்றும் அமைச்சர் கீர்த்தனா கூறி இருந்தார்.
இதுகுறித்து ஏபிபி நாடு சார்பில் விசாரித்தபோது, பள்ளி ஆய்வுக்கு ஊடகத்தினர் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கீர்த்தனாவுடன் எப்போதுமே சுமார் 10 பேர் கொண்ட குழு இருக்கும் எனவும் அது அவர்களில் சிலர் எடுத்த வீடியோ என்றும் தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், அமைச்சரே இவ்வாறு பொதுவெளியில் தவறான தகவலைப் பரப்பலாமா என்று கேள்விகள் எழுந்துள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்























