மேலும் அறிய
சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு.. மேல்நடவடிக்கை குறித்து ஒன்றிய அமைச்சகம் பதில் - மதுரை எம்.பி !
இந்தக் கடிதத்திற்கு, “மேலதிக விசாரணைக்காகவும், முன்னுரிமை அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும்” ஒன்றிய கல்வி அமைச்சகம் பதிலளித்துள்ளது.

சு.வெங்கடேசன்
சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு: உரிய விசாரணை கோரி ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம். மேல்நடவடிக்கை குறித்து ஒன்றிய அமைச்சகம் பதில்.
சு. வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
"ஒன்றிய அரசின் கல்வி வாரியத்தின் (CBSE) ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) தளத்தில் உள்ள கடுமையான தொழில்நுட்பக் குறைபாடுகள் மற்றும் மாணவர்களின் தரவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளை முன்வைத்து, மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு அவசரக் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஓட்டைகள்:
19 வயதுடைய நெறிமுறை ஹேக்கர் (Ethical Hacker) திரு. நிசர்கா அதிகாரி என்பவர், சிபிஎஸ்இ-இன் விடைத்தாள் மதிப்பீட்டுத் தளத்தில் உள்ள அதிர்ச்சியூட்டும் பாதுகாப்பு ஓட்டைகளை சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். இது பல இலட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முதல்வர்களின் டேஷ்போர்டுகளில் இருந்த, மாணவர்களின் விடைத்தாள்கள் உள்ளிட்ட சுமார் 93 இலட்சம் தரவு வரிசைகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் இருந்துள்ளன. இவற்றை மிக எளிதாகச் சிதைக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ (Tamper) சாத்தியக்கூறுகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) சேமிப்பகத்தில் இருந்த குறைபாடுகள் காரணமாக, 2026-ஆம் ஆண்டின் விடைத்தாள்கள் மற்றும் வினாத்தாள்களை அடிப்படை தொழில்நுட்ப அறிவு உள்ளவர்கள் கூட, OTP அங்கீகாரத்தைத் தவிர்த்துவிட்டு (Bypassing OTP) அணுகும் நிலை இருந்துள்ளது.
நிர்வாகத்தின் அலட்சியம்:
இந்த விவகாரம் முதலில் வெளிவந்தபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக்குறைபாடுகளை மூடிமறைக்கவே முயன்றனர். பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகே தவறு ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த குளறுபடிகளால் அதிருப்தியடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள், விண்ணப்ப விண்டோ திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 56,000-க்கும் மேற்பட்டோர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தேர்வெழுதிய மாணவர்களில் கிட்டத்தட்ட 23% பேர் (4,04,319 மாணவர்கள்) தங்களின் விடைத்தாள் நகல்களைக் கேட்டு விண்ணப்பித்துள்ளது, வாரியத்தின் மீதான நம்பகத்தன்மை சரிந்துள்ளதைக் காட்டுகிறது.
விசாரணையில் உள்ள குறைகள்:
இந்த விவகாரம் தொடர்பாகச் சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அமைச்சரவை செயலகம் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. எனினும், இந்த விசாரணையின் வரம்புகள் மிகவும் குறுகியதாக இருப்பதாக நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை மட்டுமே கொண்டு விசாரணையை நடத்துவது போதாது என்றும், தொழில்நுட்பக் குளறுபடிகளை ஆராய இணையப் பாதுகாப்பு (Cybersecurity) நிபுணர்களை ஏன் குழுவில் சேர்க்கவில்லை என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
கோரிக்கை:
உயர் கல்விச் சேர்க்கைக்கான கால அவகாசம் நெருங்கி வருவதால், பாதிக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஒன்றிய கல்வி அமைச்சகம் உடனடியாகத் தலையிட வேண்டும். என்ன நடந்தது என்பது குறித்த விரிவான நிலை அறிக்கையை (Status Report) முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் பொதுவெளியில் வெளியிட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கப் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என சு. வெங்கடேசன் எம்.பி. அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கடிதத்திற்கு, “மேலதிக விசாரணைக்காகவும், முன்னுரிமை அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும்” ஒன்றிய கல்வி அமைச்சகம் பதிலளித்துள்ளது." - எனவும் மதுரை எம்.பி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















