ICAI: இனி சிஏ பாடத்தில் ஏஐ, டேட்டா அனலிட்டிக்ஸ் அறிமுகம்; ஐசிஏஐ அதிரடி- இதுதான் காரணம்!
ஐசிஏஐ நிறுவனம் பட்டயக் கணக்காளர் பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு மற்றும் பிற வளர்ந்து வரும் பாடங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

சிஏ பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வை அறிமுகப்படுத்த ஐசிஏஐ முடிவு செய்துள்ளது.
ஐசிஏஐ எனப்படும் இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் பட்டயக் கணக்காளர் (சிஏ) பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தரவு பகுப்பாய்வு மற்றும் பிற வளர்ந்து வரும் பாடங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அனைத்துத் தொழில்துறைகளிலும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால், கணக்கியல் துறை தொடர்ந்து மாற்றமடைந்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியத் திறனாக மாறிய ஏஐ
லட்சக்கணக்கான மாணவர்கள் சிஏ படிப்பைப் படித்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஐசிஏஐயில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். சிஏ துறையில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டதால், பட்டயக் கணக்காளர்களுக்கு ஏஐ மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகியவை அத்தியாவசியத் திறன்களாக மாறியுள்ளதாக ஐசிஏஐ தலைவர் பிரசன்னா குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ’’செயற்கை நுண்ணறிவு என்பது இனி பொறியியல் போன்ற தொழில்நுட்பத் துறைகளுக்கு மட்டுமே உரியதாக இல்லை. நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் சொந்தமாகத் தொழில் செய்யும் பட்டயக் கணக்காளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும், தங்களது தொழில்முறைப் பணிகளுக்கு ஏஐ அடிப்படையிலான கருவிகள் மற்றும் தரவு பகுப்பாய்வு குறித்த அறிவு இனி அதிகளவில் தேவைப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
மாற்றங்களைப் பரிந்துரைக்க குழு அமைப்பு
தற்போதைய சிஏ பாடத்திட்டத்தை ஆய்வு செய்யவும், தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்கவும் 'கல்வி மற்றும் பயிற்சிக்கான ஆய்வுக்குழு'வை (CRET) ஐசிஏஐ அமைத்துள்ளது. இந்தக் குழு பாடத்திட்டம், செய்முறைப் பயிற்சிக் கட்டமைப்பு, மென்திறன் மேம்பாடு, தகவல் தொடர்புப் பயிற்சி மற்றும் தேர்வு முறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.
சிஆர்இடி குழு தனது பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது பரிந்துரைகளை இறுதி செய்த பிறகு, கருத்துகள் மற்றும் விவாதத்திற்காக அந்த வரைவுகள் பொதுவெளியில் வைக்கப்படும்.
ஐசிஏஐ முன்னதாக 2023ஆம் ஆண்டில் புதிய கல்வி மற்றும் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது பாடத்திட்டத்தில் மாற்றம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















