6 மாசமாகியும் வெளியாகாத தேர்வு முடிவுகள்; உதவிப்பேராசிரியர் அறிவிப்பை உடனே வெளியிடக் கோரிக்கை!
2708 பணியிடங்களில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 5 பேர் தவிர மீதமுள்ள 2705 பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை இம்மாத இறுதிக்குள் அரசும், தேர்வு வாரியமும் வெளியிட வேண்டும்- அன்புமணி.

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் மேலும் 1292 பேரை தேர்வு செய்ய புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, 6 மாதங்களாகும் நிலையில், அவற்றின் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 15ஆம் தேதியான இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், உதவிப் பேராசிரியர் நியமனங்கள் தாமதப்படுத்தப்படாமல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 61 துறைகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி வெளியிடப்பட்டு, உரிய கல்வித்தகுதி கொண்டவர்களுக்கு கடந்த டிசம்பர் 27ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தப் பணியிடங்களுக்கு 42,064 விண்ணப்பித்து அவர்களில் பெரும்பான்மையினர் தேர்வு எழுதிய நிலையில் பிப்ரவரி மாதத்தின் முதல் பாதி வரை முடிவுகள் வெளியிடப்படவில்லை.
5 துறைகளுக்கு மட்டுமே முடிவுகள்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியத்தைக் கண்டித்து கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதன்பின் அவசர, அவசரமாக செயல்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் மொத்தம் 61 துறைகளில் வரலாறு கல்வியியல், மனித உரிமைகள், இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், கடல் உயிரியல், வனவிலங்கு உயிரியல் ஆகிய 5 துறைகளில் 13 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான முடிவுகளை மட்டும் வெளியிட்டது.
அவர்களின் கல்வித்தகுதி குறித்து பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதால் அவர்களில் வெறும் 5 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணைகளை கடந்த மார்ச் 13ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தேர்தல் நடைமுறையால் தள்ளிப்போன முடிவுகள்
முடிவுகள் அறிவிக்கப்பட்ட 5 துறைகள் தவிர மீதமுள்ள 56 துறைகளுக்கான விடைத்தாள்களும் திருத்தப்பட்டு விட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில், அவற்றின் முடிவுகளை மார்ச் மாதத்திற்குள்ளாகவே வெளியிட்டிருக்க முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. ஆனாலும் தேர்தல் நடைமுறைகளைக் காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுகளை வெளியிடவில்லை.
இதையும் வாசிக்கலாம்: NEET UG 2026: நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதி- மாற்று வழிகள் என்னென்ன?
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டும், தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தும் 40 நாள்கள் ஆகும் நிலையில், இன்னும் கூட முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்காதது நியாயமில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கும் நிலையில், புதிய உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்களுக்கு பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
உடனே வெளியிடுக
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8000-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்பாமலும், தேர்வு நடத்தப்பட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமிக்காமலும் ஆசிரியர் தேர்வு வாரியம் காலம் கடத்துவது சரியல்ல. 2708 பணியிடங்களில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 5 பேர் தவிர மீதமுள்ள 2705 பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை இம்மாத இறுதிக்குள் அரசும், தேர்வு வாரியமும் வெளியிட வேண்டும்.
உதவிப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் கடந்த மே 27-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி, மேலும் 1292 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையையும் ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்























