CBSE: மாணவர்கள் வயிற்றில் பாலை வார்த்த சிபிஎஸ்இ; மும்மொழிக் கொள்கை, பொதுத்தேர்வில் புதிய மாற்றம்
CBSE 3 Language Policy: சிபிஎஸ்இ அதிரடி: 9ஆம் வகுப்பு மூன்றாம் மொழிக்கு பொதுத்தேர்வு ரத்து; 10ஆம் வகுப்புக்கு மாற்றம் இல்லை!

இந்த கல்வியாண்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழிக்கு பொதுத்தேர்வு இல்லை என்றும் 10-ம் வகுப்பு தேர்வு முறையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
தற்போதைய 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்கள் அடுத்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் போது மூன்றாம் மொழிப் பாடத்திற்கு பொதுத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதேபோல, நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தற்போதைய தேர்வு முறையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
புதிய தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பின் வழிகாட்டுதலின்படி, பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து பல்வேறு ஊகங்கள் மற்றும் குழப்பங்கள் நிலவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிபிஎஸ்இ இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
புதிய அறிவிப்பு சொல்வது என்ன?
இந்த புதிய அறிவிப்பின்படி, தற்போது 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்றாம் மொழிப் பாடத்தைத் தொடர்ந்து கற்பார்கள். ஆனால், அடுத்த ஆண்டு அவர்கள் 2027-28ஆம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு செல்லும் போது, அந்த மூன்றாம் மொழிப் பாடத்திற்கு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடத்தாது. மாறாக, அப்பாடத்திற்கான தேர்வுகள் மற்றும் மதிப்பீடுகள் அந்தந்த பள்ளி அளவிலேயே நடத்திக் கொள்ளப்படும்.
அதேபோல இந்த தளர்வு 7, 8ஆம் வகுப்புக்கும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 2 வெளிநாட்டு மொழிகளைத் தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள், ஓர் இந்திய மொழியை கூடுதலாக சேர்த்துப் படிக்க வேண்டும். எனினும் இதற்கு அவர்கள் பொதுத்தேர்வை எழுத வேண்டியதில்லை.
10ஆம் வகுப்புக்கு எப்படி?
தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு எந்த புதிய நடைமுறையும் திணிக்கப்படவில்லை. அவர்கள் வழக்கம் போலவே இரண்டு மொழிகள் மற்றும் மூன்று முக்கியப் பாடங்கள் என மொத்தம் ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. கடந்த ஆண்டுகளைப் போலவே இவர்களுக்கான பொதுத்தேர்வு நடைமுறைகள் தொடரும்.
தேசிய கல்விக் கொள்கையின் கீழ், 10-ம் வகுப்பில் மாணவர்கள் குறைந்தது இரண்டு இந்திய மொழிகள் உட்பட மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த மாற்றங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குச் சுமையை ஏற்படுத்தாத வகையில், அவசரமின்றி படிப்படியாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்பதை சிபிஎஸ்இ-யின் இந்த அறிவிப்பு உறுதி செய்துள்ளது. இதன் மூலம் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் இருந்த தேவையற்ற அச்சம் நீங்கியுள்ளது.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்























