நெருங்கும் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு; புதிய மாற்றங்கள்! மாணவர்கள் கவனத்திற்கு- முக்கிய அறிவிப்பு
சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் 2026: மாணவர்களுக்கான முக்கிய அறிவுரைகள் மற்றும் புதிய மாற்றங்கள் வெளியீடு!

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2026ஆம் ஆண்டிற்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை வரும் பிப்ரவரி 17, 2026 அன்று தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு இந்தியா மற்றும் 26 வெளிநாடுகளில் உள்ள மையங்களில் சுமார் 46 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
இதனையொட்டி, பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவுரைகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
முக்கிய அறிவுரைகள்
தேர்வுகள் காலை சரியாக 10:30 மணிக்கு தொடங்கும். ஆனால், மாணவர்கள் காலை 10 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று வாரியம் உத்தரவிட்டுள்ளது. 10 மணிக்கு மேல் வரும் மாணவர்களுக்கு, தேர்வு மையத்திற்குள் அனுமதி வழங்கப்படாது.
தேர்வு நடைபெறும் காலங்களில் முக்கிய தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள், விஐபி பயணங்கள் போன்றவை திட்டமிடப்பட்டுள்ளதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அல்லது வழிமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, மாணவர்கள் உள்ளூர் நிலவரம், வானிலை மற்றும் தூரத்தைக் கணக்கிட்டு, முன்கூட்டியே வீட்டிலிருந்து புறப்பட வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவுறுத்தி உள்ளது. கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்க, மாணவர்கள் தங்கள் தேர்வு மையத்தை முன்கூட்டியே சென்று பார்வையிடுவது சிறந்தது.
மூன்று முக்கிய மாற்றங்கள்
தேர்வு முறையை மேம்படுத்த, 2026ஆம் ஆண்டில் மூன்று முக்கிய புதிய முயற்சிகளை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியுள்ளது.
-
10ஆம் வகுப்பிற்கு இரண்டு பொதுத்தேர்வு: மாணவர்களுக்கு வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இம்முறை அறிமுகம்.
-
12-ம் வகுப்பிற்கு 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' (On-Screen Marking): விடைத் தாள்களைத் கணினித் திரையில் டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்தல்.
-
வினாத்தாள் மாற்றம்: 10-ம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் வினாத்தாள்களில் பகுப்பு முறை மாற்றங்கள்.
இதுதொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் சங்கம் பரத்வாஜ், "ஸ்மார்ட் தேர்வு, ஸ்மார்ட் மதிப்பீடு - இதுவே புதிய இந்தியாவின் அடையாளம். தொழில்நுட்பம் சார்ந்த மதிப்பீட்டு முறைகள், தேர்வுகள் மற்றும் முடிவுகள் வெளியிடும் பணியை எளிமையாகவும் துல்லியமாகவும் மாற்றும்’’ என்று தெரிவித்தார்.
பெற்றோர்கள் மற்றும் பள்ளிகள் மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி, அவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்தை அடைவதை உறுதி செய்யுமாறு சிபிஎஸ்இ கேட்டுக் கொண்டுள்ளது.
























