NEET UG 2026: நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: 5 பேர் கைது, அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!
NEET UG 2026: நீட் வினாத்தாள் மோசடி வழக்கில் இதுவரை 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இவர்களில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மூவர், குருகிராமில் ஒருவர், நாசிக்கில் ஒருவர் அடங்குவர்.

2026ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வில், பல்வேறு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக 5 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு மே 3ஆம் தேதி நடைபெற்றது. இதை நடத்தியதில் பல முறைகேடுகள் நடந்ததாக, கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள உயர்கல்வித் துறை புகார் அளித்தது. இதன் அடிப்படையில், கடந்த மே 12 அன்று சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.
என்னென்ன பிரிவுகளில் வழக்குப் பதிவு?
குற்றவியல் சதி, மோசடி, குற்றவியல் நம்பிக்கை மீறல், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) விதிகள், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) சட்டம், 2024 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 பேர் கைது
இந்த வழக்கில் இதுவரை 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இவர்களில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மூவர், குருகிராமைச் சேர்ந்த ஒருவர் மற்றும் நாசிக்கைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர். தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த விசாரணையின் ஒரு பகுதியாக மேலும் பல சந்தேக நபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சோதனைகளின் போது செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையின்போது கிடைக்கும் புதிய தடயங்களின் அடிப்படையில் மேலும் சோதனைகள் மற்றும் விசாரணை நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் மாநில சிறப்புச் செயல்பாட்டுக் குழுவுடன் இணைந்து விசாரணை
இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணையை மேற்கொண்ட ராஜஸ்தான் மாநில சிறப்புச் செயல்பாட்டுக் குழுவுடனும் சிபிஐ ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
வினாத்தாள் கசிவு புகார் தொடர்பாக, தொழில்நுட்ப மற்றும் தடயவியல் பகுப்பாய்வு மூலம் கிடைக்கக்கூடிய அனைத்துத் தடயங்களையும் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், இந்த வழக்கில் விரிவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்வதில் உறுதியுடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்























