![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Anbil Mahesh poyyamozhi: சுய விளம்பரத்துக்காக பதவியை பயன்படுத்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்? - ஆசிரியர் கூட்டணி சரமாரிக் கேள்வி!
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செயல்பாடுகள் குறித்து அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம், தமிழக ஆசிரியர் கூட்டணி சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
![Anbil Mahesh poyyamozhi: சுய விளம்பரத்துக்காக பதவியை பயன்படுத்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்? - ஆசிரியர் கூட்டணி சரமாரிக் கேள்வி! AIFETO Teachers Alliance barrage of questions to Minister Anbil Mahesh poyyamozhi Anbil Mahesh poyyamozhi: சுய விளம்பரத்துக்காக பதவியை பயன்படுத்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்? - ஆசிரியர் கூட்டணி சரமாரிக் கேள்வி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/2ae5f9fd5bc2d8f736891d9c6af0730e1706093559036332_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெற்றோர்களைக் கொண்டாடுவோம் மாநாடு குறித்தும் பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர் அன்பில் மகேஸிடம், தமிழக ஆசிரியர் கூட்டணி சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து தமிழக ஆசிரியா் கூட்டணி அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை, அமைச்சர் அன்பில் மகேஸுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
’’இந்திய அரசின் வரலாற்றில் முதன்முறையாக பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 7 மண்டலங்களில் 7 கட்டமாக நடக்கிறது. ஆனால் கூட்டத்தின் நோக்கத்தினை வெளிப்படைத் தன்மையுடன் பகிர்ந்து கொள்ளவில்லை.
முதற்கட்ட நிகழ்ச்சியில் ஜனவரி 29-ல் மதுரையில் நடைபெறும், திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஒரு பள்ளிக்கு 4 பெற்றோர்கள், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என 30 ஆயிரம் பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். அமைச்சர்கள் பி.டி.பழனிவேல்ராஜனும், மூர்த்தியும் பள்ளிக் கல்வித்துறை செயலாளரும் அனைத்து இயக்குநர்களும் பங்கேற்கிறார்கள்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விழாவிற்கு தலைமை வகித்து நடத்துகிறார். இந்த மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
30 ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் பயணச் செலவினை ஏற்றுக்கொள்வது யார்?
அழைத்து வருபவர்கள் - ஆசிரியர்கள். ஆசிரியர்கள் வேண்டுமானால் அவர்கள் சொந்த செலவில் வருவார்கள். பெற்றோர்களுக்கு பயணச் செலவு?
இரண்டு நாள் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஈடுகட்டுவது யார்?
கூட்டத்தின் நோக்கமென்ன ?
ஆசிரியர்கள் கோரிக்கைகளை எதையும் செய்ய முன்வராத பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு -
கூட்டத்தை அழைத்து வருபவர்கள் ஆசிரியர்களாம் ! கூட்டத்தை சேர்த்து தருபவர்கள் ஆசிரியர்களா?
ஆசிரியர்கள் மீது நம்பிக்கை இழந்து - ஆசிரியர் சங்கங்களை அலட்சியப்படுத்திக்கொண்டு – ஆசிரியர் மனசு திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் என்ற புது பதவியினை உருவாக்கி திருச்சி மாநகரில் அலுவலகம் தந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செயல்பட்டுவரத் தொடங்கியதற்குப் பிறகு அமைச்சர் மீதுள்ள நம்பிக்கை உணர்வினை ஆசிரியர் சங்கங்கள் இழந்துவிட்டார்கள்.
60 ஆண்டுகாலம் ஒன்றிய அளவில் தொடக்கக்கல்வி ஆசிரியாகளின் முன்னுரிமைப் பட்டியல் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறையினை மாற்றி மாநில அளவில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் முன்னுரிமையினை மாற்றியமைத்து அரசாணை எண். 243, 21.12.2023ல் பிறப்பிக்கப்பட்டதன் அவசரம்தான் என்ன ?
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழுத்தத்தால்தான் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியுமா? கருத்து கேட்கும் குழுவினை அமைத்த பள்ளிக் கல்வித்துறை தொடக்கக்கல்வி ஆசிரியா் இயக்கங்களை அழைத்து கருத்து கேட்காதது ஏன் ?
60 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக நேரடி நியமனம் செய்யப்படும் வாய்ப்பு பறிக்கப்பட்டு இருப்பது ஏன் ?
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களிடம் 12.10.2023 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 12 கோரிக்கைகளுக்கு அரசாணை பிறப்பிப்பதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றுகூட அரசாணையாக வெளிவரவில்லை.
27.01.2024 அன்று மாவட்டத் தலைநகர்களில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்துகிறார்கள்.
ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து களத்தில் இறங்கி போராடி வருகிற காலம் தாங்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக உள்ள காலத்தில்தான் என்பதை மறுக்க முடியுமா?
சுய விளம்பரத்திற்காக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவியினை பயன்படுத்துவதிலிருந்து ஒருநாள் ஒதுக்கி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வாருங்கள்’’.
இவ்வாறு தமிழக ஆசிரியா் கூட்டணி அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)