![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
அரசுக் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு: இட ஒதுக்கீட்டை சரியாகப் பின்பற்ற வலியுறுத்தல்
அரசுக் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படும் விவகாரத்தில் இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
![அரசுக் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு: இட ஒதுக்கீட்டை சரியாகப் பின்பற்ற வலியுறுத்தல் 4000 Assistant Professors Selection for Govt Colleges: Emphasis on Strict Follow up of Seat Reservation அரசுக் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு: இட ஒதுக்கீட்டை சரியாகப் பின்பற்ற வலியுறுத்தல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/02/aab7867c9904551259e766ca952d0a19_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அரசுக் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படும் விவகாரத்தில் இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி, சமூக நீதியையும், நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தை பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
முன்னதாக சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றுகூறி ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டு, வெளியிடப்பட்ட பட்டியலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த நிலையில், இட ஒதுக்கீட்டு விதிகளை முறையாகப் பின்பற்றக் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:
’’தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
வரும் 28-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆகஸ்ட் 4-ஆம் நாள் போட்டித் தேர்வுகள் நடைபெறவுள்ளன. 4,000 பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,079 ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 11 ஆண்டுகளாக ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை.
அதனால் கல்வித்தரம் சீரழிந்து வரும் நிலையில், அதைத் தடுக்க புதிய உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. 4000 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதாக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அறிவித்த தமிழக அரசு, அதற்கான அறிவிக்கையை வெளியிடாதது ஏன்? என்று கேட்டு கடந்த 9-ஆம் தேதி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி.
உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் முறை குறித்து தேர்வர்களிடம் பல்வேறு ஐயங்கள் நிலவுகின்றன. அதேபோல், கடந்த காலங்களில் ஆசிரியர்கள் தேர்வு செய்யபட்ட போது இட ஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்பட்டதில் பல்வேறு தவறுகள் நிகழ்ந்தன.
உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் நேர்மை
இது தொடர்பான ஐயங்கள் அனைத்தையும் போக்கும் வகையில், இந்த முறை அத்தகைய தவறுகள் நடக்காத வகையில், உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை மிகவும் நேர்மையாகவும், சமூக நீதியை காக்கும் வகையிலும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)