ரியல் எஸ்டேட் தொழிலதிபரை போட்டுத்தள்ளிய மனைவியும் மாமியாரும்! ஏன் தெரியுமா?
பெங்களூருவில் கடந்த வாரம் 37 வயதான ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர், அவரது மனைவி மற்றும் மாமியாரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் கடந்த வாரம் 37 வயதான ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர், அவரது மனைவி மற்றும் மாமியாரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மனைவியும் மாமியாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூர் சிக்கபனாவராவில் கார் ஒன்று தனியாக நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த அப்பகுதியினர் காரை திறந்து ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒருவர் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உயிரிழந்தவர் பெங்களூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் லோக்நாத் சிங் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வடக்கு பெங்களூரு துணை காவல் ஆணையர் சைதுல் அதாவத் கூறுகையில், “சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு 112 என்ற எண்ணில் எங்களுக்கு ஒரு துயர அழைப்பு வந்தது. அதில் சடலம் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. குற்றத்திற்காக அவரது மனைவி மற்றும் மாமியாரை நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையின் முதல் கட்டமாக உயிரிழந்தவருக்கு அவரது மனைவி முதலில் உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் அவரை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று கத்தியால் அவரது தொண்டையை அறுத்து தப்பிச் சென்றுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்டவர் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாகவும் சட்டவிரோத வணிக பரிவர்த்தனைகள் காரணமாகவும் கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
லோக்நாத் சிங் ஒரு பெண்ணுடன் 2 ஆண்டுகளாக உறவில் இருந்துள்ளார். வயது வித்தியாசத்தால் இருவரின் திருமணத்திற்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளனர். திருமணம் முடிந்த கையோடு மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் லோக்நாத் விட்டுச் சென்றுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
கடந்த வாரம் தான் பெண்ணின் பெற்றோருக்கு திருமணம் குறித்து தெரியவந்துள்ளது. மேலும், இந்த நேரத்தில்தான் லோக்நாத்தின் மனைவி மற்றும் மாமியார் குடும்பத்தினர் அவரது திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் மற்றும் சட்டவிரோத வணிக பரிவர்த்தனைகள் பற்றி அறிந்து கொண்டதாக தெரிகிறது.
இதனால் கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் வரத்தொடங்கியுள்ளது. மேலும் மனைவியையும் மாமியாரையும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என லோக்நாத் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மனைவியும் மாமியாரும் லோக்நாத்தை தீர்த்து கட்ட ஒரு சதித் திட்டத்திட்டத்தை தீட்டியுள்ளனர். அதன்படி இந்த கொலையை செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

