Dowry Crime: வரதட்சணை.. மகன் முன்பே மனைவியை எரித்துக் கொன்ற கணவன் - மாமியார் எனும் மிருகம், ரூ.36 லட்சம்
Noida Dowry Crime: வரதட்சணைக்காக கணவரே மனைவியை உயிரோடு தீயிட்டு கொளுத்தி கொன்ற சம்பவம் நொய்டாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Noida Dowry Crime: மாமியரும், கணவரும் சேர்ந்து செய்த கொடுமையில் பெண் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
வரதட்சணை கொடுமை:
தங்களது வரதட்சணை தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து, ஒரு பெண்ணை அவரது கணவரும், மாமியாரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணை உயிரோடு தீயிட்டும் கொளுத்தியதில், படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நொய்டாவில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் கசிந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நடந்தது என்ன?
சிர்சா எனும் கிராமப்பகுதியைச் சேர்ந்த விபின் எனும் நபருடன், கடந்த 2016ம் ஆண்டு நிக்கி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அடுத்த ஆறு மாதங்கள் முதலே வரதட்சணையாக கூடுதல் பணம் கேட்டு கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்த தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், கடந்த வியாழனன்று கொடூரத்தின் உச்சமாக நிக்கி கடுமையாக தாக்கப்பட்டதோடு, உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான வீடியோவில், “விபின் மற்றும் அவரது தாயார் சேர்ந்து நிக்கியை கடுமையாக தாக்கியுள்ளனர். முடியை பிடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.விபின் சட்டை அணியாத நிலையில் அவரது வயிறு மற்றும் பின்பக்கத்தில் ரத்தக்கறை இருந்துள்ளது. உடலில் தீப்பற்றி எரியும் நிலையிலேயே அவர் படிகட்டுகளில் இருந்து இறங்கி வந்துள்ளார். உடலில் ஏற்பட்ட படுகாயடங்களுடன் வலிக்கு போராடியபடி தரையில் அமர்ந்திருந்த” காட்சிகள் காண்போரை கலங்க செய்துள்ளது.
36 லட்சம் கேட்டு கொடுமை:
பாடுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தீக்காயங்களால் நிக்கி உயிரிழந்தது தொடர்பாக மருத்துவமனை தரப்பிலிருந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் சகோதரியின் புகாரின் பேரில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கசானா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிக்கியின் கணவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள மாமியார், மாமனார் மற்றும் மைத்துனர் ஆகியோரை கைது செய்ய தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிக்கியின் சகோதரியும் விபின் வீட்டைச் சேர்ந்த ஒருவரையே திருமணம் செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக பேசுகையில், “36 லட்சம் ரூபாயை வரதட்சணையாக கேட்டு எங்களை, கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தியதாக” வேதனை தெரிவித்துள்ளார்.
மகனின் கண் முன்பே எரித்துக் கொல்லப்பட்ட தாய்:
மேலும், “ சகோதரிகளில் ஒருவருக்கு தான் வரதட்சணை கிடைத்துள்ளது. மற்றொருவருக்கு கிடைக்கவில்லை. உங்களில் யாரேனும் ஒருவர் இறந்து விடுங்கள், அப்போது தான் மற்றொரு திருமணம் செய்து கொள்ள முடியும் என கூறி மீண்டும் மீண்டும் அடித்தனர். மகனின் கண் முன்பே நிக்கியின் மீது ஏதோ ஒரு எரிபொருளை ஊற்றி கணவரின் குடும்பத்தினர் எரித்தனர். நான் முயன்றும் என்னால் அவரை காப்பாற்ற முடியவில்லை. ஒருகட்டத்திற்கு மேல் நான் மயங்கி விழ, அக்கம் பக்கத்தினர் தான் நிக்கியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது கூட எனக்கு தெரியவில்லை” என காவல்நிலைய புகாரில் நிக்கியின் சகோதரி தெரிவித்துள்ளார். இதனிடையே, கொலையில் தொடர்புடைய நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கித் தர வேண்டும் என, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்





















