தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
சிறுமி துண்டு, துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகின்றன. அது தவறான செய்திகள். சம்பவ இடத்தில் சிறுமியின் சடலம் முழுமையாக கண்டெடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி கடந்த 10.03.2026 மாலை இயற்கை உபாதைக்காக தனது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் அந்த சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்று தேடினர்.
அதனை தொடர்ந்து மாணவி காணாமல் போனது குறித்து உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளனர். ஆனால், காவல்துறை உடனடியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததது மறுநாள் காலை (11.03.2026) காலை தெரியவந்தது. இதனையடுத்து உடற்கூறாய்வுக்காக மாணவியின் சடலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் இயற்கை உபாதைக்காகக் காட்டுப்பகுதிக்குச் சென்ற மாணவி ஒருவர் பாலியன் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் குளத்தூர் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்திற்குரிய நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதற்காக நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் ஆகியோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே மாணவி காணமல் போனது குறித்து புகார் அளிக்கச் சென்றபோது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும், அலட்சியமாகச் செயல்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் மாவட்ட காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதே நேரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி துண்டு, துண்டாக வெட்டிக் கொல்லப்படவில்லை என்று மாவட்ட காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறை தெரிவித்துள்ளதாவது, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதை உறுதிப்படுத்தவில்லை. உடற்கூராய்வு அறிக்கை, தடய அறிக்கை, விசாரணை அறிக்கைக்கு பின்பே பாலியல் வன்கொடுமை குற்றம் நிகழ்ந்ததா என்பது தெரியும். மேலும், சிறுமி துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகின்றன. அது தவறான செய்திகள். சம்பவ இடத்தில் சிறுமியின் சடலம் முழுமையாக கண்டெடுக்கப்பட்டது. உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு குழப்பம், அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம். சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இச்சம்பவத்தில் புகாரை வாங்க போலீஸார் மறுத்ததாக எழுந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, நெல்லை சரக டிஐஜியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதன்பேரில், விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனாவை பணியிடை நீக்கம் செய்து, டிஐஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.























