மாற்று சமூக காதல் திருமணம்! மாமனார் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் ஆம்பூர்
ஆம்பூர் அருகே மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்த பேரனின் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட மருமகளை வெட்டிக்கொன்ற மாமனார்.

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்த பேரனின் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட மருமகளை நுங்கு வெட்டும் கத்தியால் மாமனார் வெட்டிய படுகொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுக்க சென்ற மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வேலூர் - திருப்பத்தூர் மாவட்ட எல்லைப்பகுதியான பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் அபிமன்பு. இவர் சென்னையில் பணியாற்றி வந்த போது, தன்னுடன் பணியாற்றும் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணான, பிரதீபா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு, பாலூர் பகுதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வந்து நுங்கு வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அபிமன்பு மாற்று சமூக பெண்ணை, காதல் திருமணம் செய்துக்கொண்டது பிடிக்காமல், அபிமன்யுவின், தந்தையான முனியன் மற்றும், முனியனின் மூன்றாவது மனைவியான கவிதா ஆகியோர், அடிக்கடி பிரதீபாவை தாக்கி, அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து உமராபாத் காவல்நிலையத்தில், வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், நேற்று இரவு அபிமன்யு, நுங்கு வியாபாரத்திற்காக வெளியூர் செல்வதால், தனது தாத்தாவான சாமுண்டி என்பவரை தனது மனைவி பிரதீபாவிற்கு பாதுகாப்பிற்காக இருக்கும் படி கூறிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் கவிதா, பிரதீபாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை சாமுண்டி தடுக்க சென்றுள்ளார். ஆனால் தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த சாமுண்டி, நுங்கு வெட்டும் கத்தியால் கவிதாவின் கழுத்தை வெட்டியுள்ளார். இதில் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அதனை தடுக்க சென்ற முனியனுக்கும், தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, உமராபாத் காவல்துறையினர், சாமுண்டி மற்றும் முனியனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வு குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரனின் மனைவியிடம் தகராறு செய்த மருமகளை மாமனார், நுங்கு வெட்டும் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.























