அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்.. 3 மாணவர்கள் மீது பாய்ந்தது போக்சோ
கடந்த மாதம் 22 ஆம் தேதி மாணவியை, 3 மாணவர்களும் சேர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளது தெரியவந்தது. நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தியபோது, உண்மை உறுதிப்படுத்தப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 6 முதல் 12ம் வகுப்பு வரை 705 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கு, அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய 3 மாணவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி வேலை நேரம் முடிந்த பின், மாலையில் பள்ளி வளாகத்துக்குள் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, மாணவியின் பெற்றோர் 1098க்கு புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி, இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி கூறுகையில், ஆத்தூர் அருகே அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவியை, அதே பள்ளியில் பயிலும் 3 மாணவர்கள் சேர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் வந்தது. கடந்த மாதம் 22 ஆம் தேதி மாணவியை, 3 மாணவர்களும் சேர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளது தெரியவந்தது. நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தியபோது, உண்மை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து 3 மாணவர்கள் மீதும் போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாணவியை சேலம் சிறுவர்கள் வரவேற்பு இல்லத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றார்.
அரசு பள்ளி மாணவியை அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பாலியல் தொந்தரவு செய்துள்ள சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

