தனியாக இருக்கும் முதியவர்கள்தான் குறி... சேலத்தில் பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சேலத்தில் பட்டப்பகலில் முதிய தம்பதியினரை தாக்கிவிட்டு துணிகர கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாநகர் கிச்சிபாளையம் நாராயணநகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ் (75). இவரது மனைவி பிரேமா (67). கணவன் மனைவி மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி இவரது வீட்டிற்கு வந்த இரண்டு வாலிபர்கள் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று வாசலில் நின்று கேட்டுள்ளனர். வீட்டின் முன்பகுதி இரும்பு கதவு தாளிடப்பட்டிருந்தது. வீட்டிலிருந்த தம்பதி தண்ணீர் கேட்டு வந்தவர்களிடம் மறுப்பு தெரிவித்து விட்டு அனுப்பிவிட்டனர். ஆனால் அந்த இரண்டு வாலிபர்கள் பக்கத்து வீட்டு மாடிபடியில் ஏறி மாதவராஜ் வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர் மாதவராஜை தாக்கிவிட்டு பிரேமாவின் கழுத்தில் இருந்த ஏழு சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு, அவர்களது செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வந்த நிலையில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாநகர் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியில் சேர்ந்த முஸ்தபா, இம்ரான் ஆகிய இருவரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த முதிய தம்பதியர் வீட்டிற்கு வெள்ளை அடிக்கும் பணிக்கு வந்தபோது, இருவரும் தனியாக இருப்பதை அறிந்துகொண்டு திட்டம் தீட்டி வீட்டுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே கன்னங்குறிச்சி பகுதியில் மூதாட்டியை கழுத்தை அறுத்து நகை பறிப்பில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

