விளம்பரத்தை நம்பாதீங்க ! பகுதி நேர வேலை மோசடி: 5 கோடி ரூபாய் இழப்பு! எச்சரிக்கை!
பகுதி நேர வேலையாக வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என வரும் விளம்பரத்தை நம்பி முதலீடு செய்ய வேண்டாம் - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி: part time job பகுதி நேர வேலையாக வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என வரும் விளம்பரத்தை நம்பி முதலீடு செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் காவல் நிலைய போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விளம்பரத்தை நம்பி முதலீடு செய்ய வேண்டாம்
இதுகுறித்து சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தியாகராஜன் கூறுகையில்,
இன்றைய காலத்தில் பெண்கள் மற்றும் வேலை இல்லா பட்டதாரிகள் தனது மொபைல் போன்களில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற செயலிகளின் மூலம் வீட்டிலே இருந்தபடி ஆன்லைனில் வேலை தேடி வருகின்றனர். இதனை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் 'டெலிகிராம் டாஸ்க்' என்ற பெயரில் வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள், உட்கார்ந்த இடத்திலேயே எளிதாக சம்பாதியுங்கள் என்று விளம்பரங்களை போடுகின்றனர்.
அதனைநம்பி, விளம்பரத்தை பார்க்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களை, அறிமுகம் இல்லாத நபர் வாட்ஸ் ஆப் அல்லது இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு ஒரு டெலிகிராம் குழுவில் இணைக்கிறார். அவ்வாறு இணைக்கப்பட்டவர்களிடம் part time job 'பார்ட் டைம்' அல்லது 'முழு நேர' வேலை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், அந்த குழுவில் ஏதேனும் போஸ்டினை ரிவார்ட்ஸ் அல்லது ரேட்டிங் செய்தால் உங்களுக்கு பணம் வழங்கப்படும் என்று ஏமாற்றுகின்றனர்.
இதனை நம்பி எளிதான வேலையை செய்ததால், அடுத்த நிலையான 'கோல்ட் ப்ரீமியம்' உள்ளிட்ட பல்வேறு படிநிலைகள் உள்ளது. அதற்கு செல்ல வேண்டும் என்றால் நீங்கள் லட்சக்கணக்கில் முன்தொகை கட்ட வேண்டும் என்று சிறிது சிறிதாக பணத்தை பறிக்கின்றனர்.
இதற்கிடையே, அது போலி எனதெரியவந்து பணத்தை திரும்ப கேட்டால், மேலும் பணம் அனுப்பினால் தான் திரும்பத் தருவோம் என்ற சைபர் மோசடி செய்கின்றனர். இதுபோன்று புதுச்சேரியில் இதுவரையில் 300க்கும் மேற்பட்ட நபர்கள், 5 கோடி ரூபாய் மேல் மோசடி கும்பலிடம் பணத்தை ஏமாந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. எனவே விளம்பரங்களை பார்த்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.
சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க
மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.





















