புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: ஐபோன் ஆசை காட்டி ரூ.1.45 லட்சம் இழப்பு! அதிர்ச்சியில் மக்கள்!
பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு - புதுச்சேரியில் ரூ.11.65 லட்சம் மோசடி

புதுச்சேரி: தள்ளுபடியில் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்து வருவதாக கூறி ஐபோன் ஆர்டர் செய்து மோசடி கும்பலிடம் ரூ.1.45 லட்சத்தை இழந்த வாலிபர்.
புதுச்சேரி குருசுக்குப்பத்தை சேர்ந்த நபரின் நண்பர் ஹிமான்ஷூ ஜனா என்பவர், அறிமுகம் இல்லாத ஒருவர் அதிக தள்ளுபடியில் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மர்மநபரிடம் ஆன்லைன் மூலம் முதலில் சிறிய பொருட்களை குறைந்த விலைக்கு ஆர்டர் செய்தார். அவை சரியாக இருந்ததால், நம்பிக்கையின் பேரில், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 900 ரூபாய் முன்பணம் செலுத்தி ஐபோன், தனிஷ்க் தங்க நாணயம் ஆர்டர் செய்தார். அதன்பின், அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதேபோல், சோலை நகரை சேர்ந்த பெண், பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 662 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். மேலும், கொம்பாக்கத்தை சேர்ந்த நபர் 35 ஆயிரத்து 552, முதலியார்பேட்டையை சேர்ந்த பெண் 30 ஆயிரம் என மொத்தம் 4 பேர் மோசடி கும்பலிடம் 4 லட்சத்து 11 ஆயிரத்து 114 ரூபாய் இழந்துள்ளனர். புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு - ரூ.11.65 லட்சம் மோசடி
புதுச்சேரி, வில்லியனுாரை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என, ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி, அவர் பல்வேறு தவணைகளாக மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் 11 லட்சத்து 65 ஆயிரத்து 919 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். இதேபோல், திலாஸ்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், கஸ்டம்ஸ் அதிகாரி போல் பேசினார். அதில், அவரது தோழி பார்சல் அனுப்பியுள்ளதாகவும், அதற்கு கட்டணம் செலுத்தி பார்சலை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதை நம்பி, 2 லட்சத்து 77 ஆயிரம் செலுத்தியுள்ளார். அதன்பின், அந்த பார்சலை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதில் போதை பொருள் இருப்பதாகவும், அதற்கு கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என, மர்ம நபர் தெரிவித்தார். அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதேபோல், வில்லியனுார் நபர் 8 ஆயிரம், கிருமாம்பாக்கம் பெண் 11 ஆயிரத்து 700, முத்தியால்பேட்டை பெண் 12 ஆயிரத்து 695 என, 5 பேர் மோசடி கும்பலிடம் 14 லட்சத்து 75 ஆயிரத்து 314 ரூபாய் இழந்துள்ளனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





















