"வெளியே சொன்னால் கொலை செய்திடுவேன்.." மயிலாடுதுறையில் 53 வயது பெண்ணை மிரட்டிய அரசியல் பிரமுகர் சிறையிலடைப்பு!
மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் நாற்காலி விற்கச் சென்ற பெண் வியாபாரியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்த தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் நாற்காலி விற்கச் சென்ற பெண் வியாபாரியை வீட்டிற்குள் வரவழைத்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) மாநில பொதுக்குழு உறுப்பினரை மயிலாடுதுறை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், அப்பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த 53 வயதான பெண்மணி ஒருவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக, தெருத் தெருவாகச் சென்று கோரைப்பாய்கள் மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகளை (சேர்) விற்பனை செய்து சுயதொழில் செய்து குடும்ப வாழ்வாதாரத்தை காத்து வருகிறார். இந்நிலையில், மயிலாடுதுறை ரயிலடி மேல ஒத்தசரகு தெருவைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் 59 வயதான ஜான் ராஜ்குமார் என்பவரிடம் அந்த பெண் சேரை வியாபாரம் செய்துள்ளார். ஜான் ராஜ்குமார் தேமுதிக கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராகப் பொறுப்பில் உள்ளார்.
வீட்டிற்கு வரவழைத்து அத்துமீறல்
சம்பவத்தன்று, அந்த பெண்மணியிடம் இருந்து ஜான் ராஜ்குமார் 10 பிளாஸ்டிக் நாற்காலிகளை வாங்கியுள்ளார். அவ்வாறு வாங்கிய நாற்காலிகளில் 2 நாற்காலிகள் உடைந்திருப்பதாகக் கூறிய ஜான் ராஜ்குமார், அதற்குப் பதிலாக வேறு நல்ல நாற்காலிகளை எடுத்து வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து நேற்று மாலை சுமார் 6 மணி அளவில், அவர் புதியதாக 2 பிளாஸ்டிக் நாற்காலிகளை எடுத்துக்கொண்டு ஜான் ராஜ்குமாரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஜான் ராஜ்குமார், வெளியில் நின்ற பெண்மணியிடம், அந்த நாற்காலிகளை வீட்டிற்குள்ளே கொண்டு வந்து வைத்துவிட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார்.
வாடிக்கையாளர் கூறுகிறாரே என்ற நம்பிக்கையில், அவர் அந்த 2 நாற்காலிகளையும் தூக்கிக்கொண்டு வீட்டின் ஹாலுக்குள் (வரவேற்பு அறை) சென்று வைத்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக ஜான் ராஜ்குமார் திடீரென அந்த பெண்மணியை பலவந்தமாக அரவணைத்து, அவருக்கு முத்தம் கொடுத்து பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த திடீர்ச் செயலால் நிலை குலைந்த அவர், அதிர்ச்சியிலும் பயத்திலும் கூச்சலிட்டவாறே அவரை பலமாகத் தள்ளிவிட்டு, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார்.
கொலை மிரட்டல் விடுத்த அரசியல் பிரமுகர்
வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததைக் கண்டு பதற்றமடைந்த ஜான் ராஜ்குமாரும் பின்னாடியே வெளியே வந்துள்ளார். தனது அரசியல் செல்வாக்கை நம்பி, அந்த பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி, "இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை உயிரோடு விடமாட்டேன், கொலை செய்துவிடுவேன்" என்று கொடூரமாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் வியாபாரி, ஜான் ராஜ்குமாரின் மிரட்டலுக்குப் பயந்துவிடாமல், தனக்கு நேர்ந்த அநீதிக்குச் சட்டப்படி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற துணிச்சலுடன் மயிலாடுதுறை காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.
போலீசாரின் அதிரடி விசாரணை மற்றும் கைது
அரசியல் கட்சிப் பிரமுகர் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், புகார் பெறப்பட்டவுடன் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் பெண் வியாபாரியிடம் ஜான் ராஜ்குமார் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும், கொலை மிரட்டல் விடுத்ததும் உண்மை எனத் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, ஒரு பெண்ணின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவித்தல், பாலியல் வன்கொடுமை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜான் ராஜ்குமாரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர் - சிறையிலடைப்பு
கைது செய்யப்பட்ட ஜான் ராஜ்குமாரை, மயிலாடுதுறை போலீசார் பலத்த பாதுகாப்புடன் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட ஜான் ராஜ்குமாரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சுயதொழில் செய்து பிழைப்பு நடத்தும் 53 வயது பெண் வியாபாரியிடம், அரசியல் பொறுப்பில் இருக்கும் நபர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும், அதற்கு போலீசார் காட்டிய அதிரடி நடவடிக்கையும் மயிலாடுதுறையில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















