மரணக் குழியாக மாறிய சாலை: கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்! கோரிக்கைக்கு செவிசாய்க்குமா அரசு?
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அரசூர் - காப்பியகுடி இடையிலான பழுதடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரி கிராம மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டம் அதிகாரிகளின் சமரசப் பேச்சுவார்த்தையை தொடர முடிவுற்றது.

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில், பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாத சாலையைக் கண்டித்தும், புதிய சாலை அமைக்கக் கோரியும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளின் சமரச பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
துயரத்தின் நான்கு கிலோமீட்டர்;பரிதவிக்கும் கிராமங்கள்
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசூர் முதல் காப்பியகுடி வரை செல்லும் சுமார் 4 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை, கடந்த பல ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இன்றி முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. இந்த சாலையானது காப்பியகுடி, மணலகரம், வைரவனிருப்பு, கண்டிராஜநல்லூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு முக்கிய போக்குவரத்து வாழ்வாதாரமாக உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் மற்றும் அவசர சிகிச்சைக்காகச் செல்லும் முதியவர்கள் இந்தச் சாலையையே நம்பியுள்ளனர்.
தொடர் விபத்துகளால் விளைந்த ஆவேசம்
தற்போது இந்தச் சாலை முழுவதும் பெரிய அளவிலான குண்டும் குழியுமாக மாறி, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. "சாலையில் நடக்கவே அச்சமாக உள்ளது" என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள். சாலையில் உள்ள குழிகளால் நிலைதடுமாறி விழுந்து, பல இளைஞர்களும் முதியவர்களும் காயமடைந்துள்ளனர், லேசான மழை பெய்தாலே சாலை முழுவதும் குளம்போல நீர் தேங்கி, பாதையே தெரியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் ஊராட்சி நிர்வாகமோ அல்லது நெடுஞ்சாலைத் துறையோ நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கிராம மக்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
கொதித்தெழுந்த கிராம மக்கள்: சாலை மறியல் போராட்டம்
அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, அரசூர் இணைப்புச் சாலையில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ஒன்று திரண்டனர். ஆண்களும் பெண்களும் கைகளில் பதாகைகளை ஏந்தி, சாலையின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. "உடனடியாகப் புதிய தார்ச் சாலை அமைக்க வேண்டும், அதுவரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்" என முழக்கமிட்டதால் அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது.
அதிகாரிகளின் சமரசம் மற்றும் வாக்குவாதம்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொள்ளிடம் காவல்துறையினர் மற்றும் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், "தற்காலிகமாக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலையில் உள்ள பெரிய குழிகள் மற்றும் பழுதான இடங்கள் உடனடியாகச் சீரமைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த அறிவிப்பால் திருப்தியடையாத பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "பத்து லட்சம் ரூபாயில் செய்யப்படும் கண்துடைப்பு வேலைகள் எங்களுக்குத் தேவையில்லை. ஒரு மழை பெய்தால் மீண்டும் பழைய நிலைக்குத் தான் சாலை மாறும். எங்களுக்குத் தரமான புதிய தார்ச் சாலை தான் வேண்டும்" என உறுதிப்படத் தெரிவித்தனர்.
போராட்டம் வாபஸ்
மக்களின் பிடிவாதத்தையும் நியாயமான கோரிக்கையையும் உணர்ந்த அதிகாரிகள், பின்னர் உரிய மேல் அதிகாரிகளுடன் ஆலோசித்தனர். இறுதியில், "பழுதான இடங்களைச் சரி செய்வதோடு மட்டுமல்லாமல், இச்சாலை முழுவதையும் புதிய சாலையாக அமைத்துத் தரத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்படும்" என உறுதி அளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் நடத்திய சாலை மறியலைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
























