சாப்பாடு பரிமாறாத ஆத்திரம்.. மனைவியை கொலை செய்ய தூண்டிய பசி.. தொழிலாளி கைது!
கணேசன் காலையில் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டு பசி அதிகமாக இருந்ததால் வீட்டுக்கு சாப்பிட வந்துள்ளார். ஆனால் மனைவியோ சாப்பாடு பரிமாற சொல்லியும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்பத் தகராறில் டேபிள் ஃபேனால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வரும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் தனது மனைவி அமுதாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 14) கணேசன் காலையில் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார். மதியம் 2.30 மணியளவில் அவருக்கு பசி அதிகமாக இருந்ததால் வீட்டுக்கு சாப்பிட வந்துள்ளார். தனது மனைவி அமுதாவிடம் சாப்பாடு பரிமாற சொல்லியுள்ளார்.
ஆனால் மனைவியோ கணேசன் சொன்னதை காதில் வாங்காமல் வேறு ஏதோ வேலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கணேசன் இரண்டு, மூன்று முறை சொல்லியும் அமுதா அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். ஏற்கனவே கடும் பசியில் இருந்த கணேசனுக்கு மனைவியின் நடத்தை கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆத்திரமடைந்த அவர், வீட்டில் இருந்த டேபிள் ஃபேனை எடுத்து அமுதாவின் தலையில் பலமுறை அடித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அமுதா அலறி துடித்த நிலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரின் அலறக் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் அங்கு அமுதா உயிரிழந்து கிடப்பதையும், அருகில் இரத்தக்கறையுடன் கூடிய டேபிள் ஃபேனுடன் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து பீர்க்கன்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அமுதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கணேசனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அமுதா சில மாதங்களாக மன அழுத்தத்திற்கு சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், மருந்துகளை உட்கொண்டதாகவும் தெரிய வந்தது. அதனால் கணேசன் சொன்னதை காதில் வாங்காமல் அவர் இருந்ததால் ஆத்திரத்தில் இந்த கொலை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளைஞர் தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே பிப்ரவரி 13ம் தேதி மின்சார ரயிலில் இளைஞர் ஒருவார் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். ஆதம்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த ராமச்சந்திரன் என்ற இளைஞர் சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் காதல் தோல்வி காரணமாக அந்த இளைஞர் தற்கொலை செய்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாக தனது நண்பர்களை கான்பரன்ஸ் கால் மூலம் தொடர்பு கொண்டு தண்டவாளத்தில் இருப்பதாகவும், தற்கொலை செய்துக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்ததாக போலீசார் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளது.























