![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்த போலீஸ்க்கு அடி உதை - கோவில்பட்டியில் பரபரப்பு
போஸ்டர் ஒட்டியதை தடுத்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலருக்கு அடி உதை விழுந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
![அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்த போலீஸ்க்கு அடி உதை - கோவில்பட்டியில் பரபரப்பு Kovilpatti: Inspector and constable kicked for preventing unauthorized postering TNN அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்த போலீஸ்க்கு அடி உதை - கோவில்பட்டியில் பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/18/5588cd04c1ba54a4c69b91beb2e1afd61663474112432109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்து நிறுத்திய போது பாஜகவினர் -போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் அவரது ஓட்டுநர் பாண்டி ஆகியோரை பாஜகவினர் தாக்கியதில் படுகாயமடைந்தனர். இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக நகர பாஜக தலைவர் சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகி ரகுபாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் அ. ராசாவை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் பஸ் ஸ்டாண்ட் அருகே இந்து முன்னணி அமைப்பினர் நேற்று நள்ளிரவில் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் அவரது ஓட்டுநர் காவலர் பாண்டி ஆகியோர் அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்து நிறுத்தி போஸ்டரை பிடுங்கி சென்றதாக தெரிகிறது.
இந்து முன்னணி போஸ்டரை பிடுங்கியதை கண்டித்து பாஜக நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆய்வாளர் சென்ற வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கிய ஆய்வாளர் சுஜித் ஆனந்தை பாஜகவின் கோவில்பட்டி நகர தலைவர் சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகி ரகு பாபு உள்ளிட்ட சிலர் சட்டையை கிழித்து தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இதனை தடுக்க முயன்ற காவலர் பாண்டியையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர். பின்னர் போலீசார் அவர்களை விரட்டி சென்றதில் பாஜக நகர தலைவர் சீனிவாசன் மற்றும் ரகு பாபு ஆகியோரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். காயமடைந்த ஆய்வாளர் சுஜித் ஆனந்த் காவலர் பாண்டி ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள் நோயாளி பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
காவல் ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏடிஎஸ்பி கார்த்திகேயன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வாளர் சுஜித் ஆனந்த் காவலர் பாண்டி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாஜக நகர தலைவர் சீனிவாசன் மற்றும் ரகு பாபு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். போஸ்டர் ஒட்டியதை தடுத்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலருக்கு அடி உதை விழுந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)