Pune Murder Case: புனே கொடூரம்: ஹுடியால் சிக்கிக் கொண்ட கொலையாளி? 20 வயது பெண்ணின் கொடூர ஸ்கெட்ச்!
நாட்டையே உலுக்கிய புனே கொலை வழக்கில் இளம்பெண்ணும், அவரது காதலனும் சிக்கியது எப்படி? என்பதை கீழே விரிவாக காணலாம்.

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் அமைந்துள்ளது லோகாகத் கோட்டை. மிகவும் புகழ்பெற்ற இந்த பகுதி பிரபலமான சுற்றுலா தளம் ஆகும். இங்கு கடந்த 18ம் தேதி தனது வருங்கால மனைவியுடன் சுற்றுலாவிற்கு சென்ற இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வால் 400 அடி பள்ளத்தில் தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசுக்கு சந்தேகம் வந்தது எப்படி?
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசாருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியானது. தொடக்கத்தில் இது விபத்து என்று போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால், அவரது வருங்கால மனைவி சியா சொன்ன தகவலும், அப்போது அங்கு நிலவிய சூழலும் போலீசாருக்கு சந்தேகத்தை வலுப்படுத்தியது. இதையடுத்து, போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
ஹுடியால் மாட்டிக்கொண்டது எப்படி?
அந்த சிசிடிவி காட்சியில் கேத்தன் - சியா லோகோகத் கோட்டை மலைக்குச் சென்ற அதே தினத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு நபர் உலா வந்துள்ளார். அதாவது, 33 டிகிரி வெப்பநிலை நிலவிய அந்த தருணத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் குளிர் நேரத்தில் அணியும் ஹுடியுடன் முகத்தை மூடியவாறு காதில் ஹெட்செட் அணிந்து சென்றுள்ளார். இது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
அவர் யாரென்று போலீசார் நடத்திய விசாரணையில் அது சேத்தன் செளத்ரி என்று தெரிய வந்துள்ளது. மேலும், சியா கோயல் ஏற்கனே இரு முறை லோகாகத் கோட்டைக்கு உயிரிழந்த கேத்தனை அழைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பலத்த காற்று காரணமாக தடுமாறி கேத்தன் கீழே விழுந்து உயிரிழந்ததாக சியா கூறியதும் போலீசாருக்கு ஏற்கனவே சந்தேகமாக இருந்த சூழலில், இந்த சந்தேகம் இன்னும் அதிக சந்தேகத்தை உண்டாக்கியது.
விசாரணையில் வந்த உண்மை:
பின்னர், சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிய சேத்தன் செளத்ரி மற்றும் சியா கோயல் இருவரின் செல்போன் எண்களையும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் பல முறை போனில் பேசியிருப்பதும், இருவரும் காதலித்து வந்ததும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இளம் தொழிலதிபர் கேத்தனை இருவரும் 400 அடி பள்ளத்தில் கீழே தள்ளி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும், போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக சியாவின் காதலன் சேத்தன் தனது செல்போனை தனது அலுவலகத்திலே வைத்துவந்துவிட்டதுடன் தனது இணைய வசதியையும் ஆஃப் செய்துவைத்து சென்றுள்ளார்.
சியா சொன்ன அதிர்ச்சி காரணம்:
மேலும், ஹுடி அணிந்து சென்றால் போலீசார் பிடியில் இருந்து தப்பிவிடலாம் என்று கருதிய நிலையில் அந்த ஹுடியாலே அவர் மாட்டிக்கொண்டுள்ளார். சியா கோயலிடம் போலீசார் திருமணத்தில் உடன்பாடு இல்லையென்றால் திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே? அல்லது சேத்தன் செளத்ரியுடன் சென்றிருக்கலாமே? என்று கேட்டதற்கு அவ்வாறு செய்தால் தனது குடும்பத்தின் நற்பெயர் கெட்டுவிடும் அதன் காரணமாகவே இந்த நாடகத்தை அரங்கேற்றியதாகவும் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொலை சம்பவம் ஒட்டுமொத்த மகாராஷ்ட்ரா மட்டுமின்றி இந்தியாவையே அதிர வைத்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















