வீட்டில் மிளகாய் பொடி தூவி அரசு பள்ளி ஆசிரியர் கொடூரக் கொலை: செஞ்சி அருகே அரங்கேறிய பயங்கரம்!
நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் அவரது வீட்டிற்குள்ளேயே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் : செஞ்சி அருகே, நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் அவரது வீட்டிற்குள்ளேயே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்தும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் வளத்தி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அம்மாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (50). இவர் மேல் ஓலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு இவரது கல்விச் சேவையைப் பாராட்டி இவருக்கு 'நல்லாசிரியர் விருது' வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருமணமான ஒரே மாதத்திலேயே இவருடைய மனைவி இவரை விட்டுப் பிரிந்துவிட்ட நிலையில், இளங்கோவன் தனது தாயாருடன் தனியாக வசித்து வந்தார். மேலும், ஆசிரியர் பணியுடன் சேர்த்து சுயதொழிலாக பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழிலையும், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலையும் அவர் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
3 நாட்களுக்குப் பின் வெளிவந்த கொடூரம்:
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக ஆசிரியர் இளங்கோவன் யாரிடமும் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. நேற்று மாலை 3 மணி அளவில் அவரது தாய் மற்றும் சகோதரிகள் இளங்கோவனின் தொலைபேசிக்குத் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அவர் அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்த இளங்கோவனின் அக்கா மகன், அம்மாக்குளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று பார்த்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, இளங்கோவன் உடல் உருமாறி, அழுகிய நிலையில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு உறைந்து போயினர்.
போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை:
இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் உடனடியாக வளத்தி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) சாய் பிரனீத், செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) ரமேஷ் ராஜ் மற்றும் வளத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், தடய அறிவியல் நிபுணர் ராஜிவ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் இருந்த தடயங்களைச் சேகரித்தனர்.
மிளகாய் பொடி தூவல் - கொலையா?
போலீசார் நடத்திய முதற்கட்ட ஆய்வில், ஆசிரியர் இறந்து கிடந்த இடத்தைச் சுற்றிலும், வீட்டின் உள்ளேயும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மோப்ப நாய் மற்றும் போலீசார் தடயம் கண்டுபிடிப்பதைத் திசை திருப்புவதற்காகவே கொலையாளிகள் மிளகாய் பொடியைத் தூவியிருக்கலாம் என்று போலீசார் பலமாகச் சந்தேகிக்கின்றனர். இதனால் இது திட்டமிட்ட கொலை என்பது உறுதியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அழுகிய நிலையில் இருந்த இளங்கோவனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே நடந்த கொலை முயற்சி:
கொலை செய்யப்பட்ட ஆசிரியர் இளங்கோவனுக்குப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக யாருடனாவது முன்விரோதம் இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, செஞ்சி அடுத்த நெகனூர் ஏரிக்கரை அருகே சென்றுகொண்டிருந்த போது, மர்ம நபர்கள் சிலர் இளங்கோவனைக் கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவமும் ஏற்கனவே நடந்துள்ளது.
அப்போது தப்பிய இளங்கோவன், தற்போது வீட்டில் தனியாக இருந்தபோது கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வளத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அரசுப் பள்ளி ஆசிரியர், அதுவும் நல்லாசிரியர் விருது பெற்றவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
’சூலூர் வழக்கில் சிரித்த பெண் IG’ யார் இந்த ரம்யா பாரதி?
ட்ரெண்டிங் செய்திகள்





















