![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கடலூர்: மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை - வாலிபருக்கு 10 ஆண்டு சிறை , நண்பர் விடுதலை..!
கடலூர்: கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.
![கடலூர்: மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை - வாலிபருக்கு 10 ஆண்டு சிறை , நண்பர் விடுதலை..! cuddalore: man kidnapped sexually assaulted college student has been sentenced to 10 years in prison கடலூர்: மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை - வாலிபருக்கு 10 ஆண்டு சிறை , நண்பர் விடுதலை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/21/90ab1caf3d09b79481b6981d44183e35_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிதம்பரம் நகர பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார் மகன் கலியபெருமாள் (வயது 24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த 2.12.2019 அன்று கலியபெருமாள், அந்த மாணவியை சாமியார்பேட்டையில் உள்ள தனது நண்பர் அய்யப்பன் (24) வீட்டுக்கு கடத்தி சென்றார். அப்போது அய்யப்பன் அவர்களது செலவுக்கு பணம் கொடுத்து, அவர்களை திருப்பூருக்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்ற கலியபெருமாள் அந்த மாணவியை திருமணம் செய்து, வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.
மேலும் அவர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவர்கள் 23.3.2020 அன்று சிதம்பரத்தில் உள்ள அய்யப்பனின் அத்தை வீட்டுக்கு வந்து தங்கியிருந்தனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சிதம்பரம் டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் கலியபெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவருக்கு உடந்தையாக இருந்த அய்யப்பன் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடுத்தனர்.
இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட கலியபெருமாளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அய்யப்பன் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு சமூக பாதுகாப்பு துறையின் சமூக நல நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.
போக்சோ சட்டம் என்றால் என்ன?
போக்சோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012ல் உருவான சட்டமே போக்சோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)