இன்ஸ்டா பெண் பிரபலம் கொடூர கொலை! தூக்கில் தொங்கிய கணவன் - சென்னையில் நடந்தது என்ன?
சென்னையில் இன்ஸ்டாகிராம் பிரபலமான மனைவியை கணவன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை நங்கநல்லூரில் வசித்து வருபவர் நாகலட்சுமி. இவருக்கு வயது 42. இவரது கணவர் சுப்பிரமணியன். இவருக்கு வயது 52. இந்த தம்பதியினருக்கு ஹரிஷ் பரத்வாஜ், சைலாஷ் என இரு மகன்கள் உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் பிரபலம்:
நங்கநல்லூர் மற்றும் அண்ணாநகரில் நாகலட்சுமி பட்டுப்புடவை விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கணவர் சுப்பிரமணியனுக்கு வேலை இல்லை என்றும், போதிய வருமானம் இல்லை என்றும் கூறப்படுகிறது. பட்டுப்புடவை விற்பனை நிலையம் நடத்தி வருவதுடன் இன்ஸ்டாகிராமில் பட்டுப்புடவை பற்றி ஏராளமான வீடியோக்களையும் அவர் பதிவிட்டு வந்துள்ளார். இதனால், அவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 3 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
குடும்பத் தகராறு:
இதனால், நாகலட்சுமிக்கு வருவாய் போதுமான அளவு இருந்து கொண்டே இருந்துள்ளது. இவர்களின் முதல் மகன் ஹரிஷ் பரத்வாஜ் ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருகிறார். 2வது மகன் சைலாஷ் சென்னையில் பல் மருத்துவம் படித்து வருகிறார். ஆனால், சுப்பிரமணியன் வேலைக்குச் செல்லாததால் கணவன் - மனைவிக்கு இடையே சண்டை அவ்வப்போது ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், சுப்பிரமணியன் தனது மனைவியிடம் கோபித்துக் கொண்டு மதுரையில் தனியாக வசித்து வந்துள்ளார். ஆனாலும், அவருக்கு தேவையான பணத்தை நாகலட்சுமி தொடர்ந்து அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுப்பிரமணியன் சென்னைக்கு வந்துள்ளார். சென்னை திரும்பியது முதலே நாகலட்சுமிக்கும், சுப்பிரமணியனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மனைவி கொலை - கணவன் தற்கொலை:
இந்த சூழலில், நாகலட்சுமியின் 2வது மகன் சைலாஷிற்கு சுப்பிரமணியன் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதில் அவர் நானும் அம்மாவும் இனி இருக்கமாட்டோம். உனக்கு சாப்பாடு வைத்திருக்கிறேன் என்று இருந்துள்ளது. இதனால், பதற்றம் அடைந்த சைலாஷ் உடனடியாக போன் செய்துள்ளார். ஆனால், இருவரும் போன் எடுக்கவில்லை.
இதையடுத்து, பதறியடித்து வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு கழுத்து, தலை மற்றும் கைகளில் அரிவாளால் வெட்டப்பட்டு நாகலட்சுமி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். மற்றொரு அறையில் சுப்பிரமணியன் சடலமாக தொங்கியுள்ளார். இதைக்கண்ட சைலாஷ் அலறியடித்து துடித்துள்ளார்.
போலீஸ் விசாரணை:
பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக சுப்பிரமணியனுக்கும் நாகலட்சுமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சுப்பிரமணியன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர், வீட்டிற்கு வந்து அரிவாளால் நாகலட்சுமியை கொலை செய்து அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















