தோகமலை கேட்டரிங் கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்.. சந்தேகம் எழுப்பும் பெற்றோர்
அருள் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து போதுராவுதன்பட்டி ஊராட்சி அக்கரைகாம்பட்டியில் உள்ள தோட்டத்தில் கிணற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார் என சொல்லப்படுகிறது

தோகமலை அருகே கிணற்றில் சக நண்பர்களுடன் குளித்தபோது கேட்டரிங் படித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கரூர் மாவட்டம், தோகைமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட கீரனூர் ஊராட்சி, குன்னுடையான் கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் அருள் (வயது 18). இவர் கரூரில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் கல்லூரி விடுமுறை என்பதால் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து போதுராவுதன்பட்டி ஊராட்சி அக்கரைகாம்பட்டியில் உள்ள பொம்மாநாயக்கன் என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது நீச்சல் தெரியாமல் அருள் தண்ணீரில் மூழ்கினார் என சொல்லப்படுகிறது. இதைக்கண்ட சக நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து உறவினர்கள், பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் தோகைமலை போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றில் கயிறு கட்டி இறங்கி நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அருளின் உடலை பிணமாக மீட்டனர்.
பின்னர் அருளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் அருளின் தந்தை விஜயகுமார் தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேட்டரிங் கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

