ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
எட்டு இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் உள்பட எட்டு பேரிடம் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் க்ரைம் ரேட் கூடிக்கொண்டே செல்கிறது. தமிழக அரசு மீது அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றன. மேலும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக பெரும் போராட்டங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் அண்ணா பல்கலையில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்தது என்று சொல்லலாம். அந்த அலை சற்று ஓயத்தொடங்கிய காலத்தில் மீண்டும் தாம்பரம் அருகே செயின் பறிப்பு சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது நேற்று ஒரே நாளில் பெண் காவலர் உட்பட 8 பேரிடம் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர், சீருடையில் இருக்கும்போதே அவரது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு சென்றிருக்கின்றனர்.
திமுக அரசு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் பாஜக தொண்டர்களைப் பின்தொடர்வதையே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியதன் விளைவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண் காவலரிடமே செயின் பறிப்புச் சம்பவம் நடக்கும் அளவுக்கு, தமிழக மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
— K.Annamalai (@annamalai_k) January 18, 2025
குறிப்பாக, சென்னை காவல் ஆணையர்… pic.twitter.com/FRvRrME25l
திமுக அரசு, இனியும் காவல்துறையினரை, அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சமூக விரோதிகளுக்கு எதிராக, காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். காவல்துறையினரும், திமுகவின் அதிகார துஷ்பிரயோகங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் முதற்கடமையான சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

