பிரியாணி தாமதம், ஆணவக் கொலை குற்றச்சாட்டு! தற்கொலை வழக்கை மாற்றக் கோரி விசிக போராட்டம் !
விழுப்புரம் அருகே கணவர் பிரியாணியை கால தாமதமாக வாங்கி வந்ததாலும், கலப்புத் திருமணத்தால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையாலும் பெண் தற்கொலை !

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கணவர் பிரியாணியை கால தாமதமாக வாங்கி வந்ததாலும், கலப்புத் திருமணத்தால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையாலும் பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அந்த வழக்கை வரதட்சணை கொடுமை மற்றும் ஆணவப்படுகொலை என வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிகவினர் வளவனூர் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டதில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் சொர்னாவூர் கிராமம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் வசந்தகுமார்(24). இவரும் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள அழகப்பாசமுத்திரம் கிராமம் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்த தேவஜெஸிபிரியா என்பவரும் கடந்த மூன்றாண்டுகளாக கடலூரில் உள்ள பெரியார் அரசினர் கலை கல்லூரியில் படிக்கும் போதிலிருந்து காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் மூன்று மாதங்களுக்கு முன் பெற்றோர் முழுமையான சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு சொர்னாவூர் பகுதியில் வசந்தகுமார் வீட்டில் வசித்து வந்துள்ளனர். பெண் பட்டியலின சமூகத்தை சார்ந்தவர் என்பதாலும், காதல் திருமணம் என்பதாலும் குடுபத்திற்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த தேவஜெஸி பிரியா தனி குடித்தனம் செல்ல தனது கணவரிடம் அறிவுறுத்தியதற்கு வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி கணவரிடம் ஜெஸிபிரியா பிரியாணி வாங்கி தர கூறியபோது கணவர் தாமதமாக வாங்கி வந்து கொடுத்ததால் ஆத்திரமடைந்த தேவஜெஸிபிரியா, எது கேட்டாலும் தாமதமாக வாங்கி தருவது, இதற்கா உன்னை திருமணம் செய்து கொண்டேன் என தெரியவில்லை எனவும் குடும்ப பிரச்சினைகளையும் காரணம் காட்டி இதற்கு நான் செத்தே போகாலாம் என கூறி வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இறந்த தேவஜெஸிபிரியா உடல் விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்யப்பட்ட நிலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் விசிகவை சார்ந்தவர்கள், 15 சவரன் தங்க நகையை கேட்டு வசந்தகுமார் குடும்பத்தினர் கொடுமை படுத்தியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகாவும் இதனை ஆணவ படுகொலை செய்ய கூறி இன்று வளவனூர் காவல்நிலையத்தை 300 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தற்கொலைக்கு தூண்டியதாகவும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இழப்பீடாக அரசு சார்பில் ஒரு கோடியும் இறந்த பெண்ணின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இச்சம்பவம் தொடர்பாக விசாரனை செய்து வருவதாகவும், வசந்த குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். மேலும் தற்கொலை சம்பவம் தொடர்பாக விழுப்புரம் கோட்டாட்சியர் முருகேசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.























