போதைக்கு ஆசைப்பட்ட கணவன்! கருணை காட்டாமல் தீர்த்துக்கட்டிய மனைவி.. கள்ளக்காதலுடன் கைது
போலீசாரின் விசாரணையில், அசோக் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்த நிலையில் மனைவி புஷ்பா (33), அவரது காதலர் தேவராஜ் (33) மற்றும் கூட்டாளிகளான முனிந்த்ரா, சித்தப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்

பெங்களூரு புறநகர் பகுதியில் கணவரை கொலை செய்துவிட்டு அதை விபத்து போல சித்தரித்து நாடகமாடிய மனைவி மற்றும் காதலரை போலீசார் கையும் களவுமாக சிக்கிய நிலையில் இந்த கொலை குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது
சம்பவத்தின் பின்னணி
ஜனவரி 24 அன்று, பெங்களூரு ஊரக மாவட்டம் ஒசக்கோட்டை தாலுக்காவில் உள்ள சித்தேனஹள்ளி கிராமச் சாலையில், அசோக் (40) என்பவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இது ஒரு 'ஹிட் அண்ட் ரன்' (மோதிவிட்டு நிற்காமல் சென்ற) விபத்து என்றே கருதப்பட்டது. இருப்பினும், சம்பவ இடத்திலிருந்த முரண்பாடுகள் மற்றும் அப்பகுதி மக்களின் சந்தேகத்தினால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வெளிவந்த உண்மைகள்
போலீசாரின் விசாரணையில், அசோக் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது மனைவி புஷ்பா (33), அவரது காதலர் தேவராஜ் (33) மற்றும் கூட்டாளிகளான முனிந்த்ரா, சித்தப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசோக் - புஷ்பா தம்பதிக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபகாலமாக அசோக்கிற்கு மதுப்பழக்கம் ஏற்பட்டதால், அவர் புஷ்பாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. புஷ்பா நடத்தி வந்த சிறு கடைக்கு, நந்தினி பால் டேங்கர் டிரைவரான தேவராஜ் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
கொலைத் செய்ய திட்டம்
இவர்களின் உறவை அசோக் சந்தேகிக்கத் தொடங்கியதால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. புஷ்பாவை அசோக் துன்புறுத்தியதால், அவரைக் கொலை செய்ய புஷ்பாவும் தேவராஜும் திட்டமிட்டுள்ளனர். புஷ்பா மற்றும் அவரது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தான் பொறுப்பேற்பதாக தேவராஜ் உறுதியளித்துள்ளார்.
கொலை செய்தது எப்படி?
ஜனவரி 24 அன்று, தேவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அசோக்கை மது அருந்தலாம் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளனர். ஒரு ஏரிக்கரை அருகே வைத்து அசோக்கை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர், இது விபத்து போலத் தெரிய வேண்டும் என்பதற்காக, சாலையின் வளைவுப் பகுதியில் சடலத்தை வீசிச் சென்றுள்ளனர்.
பிடிபட்டது எப்படி?
தனது கணவர் விபத்தில் இறந்துவிட்டதாக புஷ்பாவே போலீசில் புகார் அளித்தார். ஆனால், உடற்கூறாய்வு அறிக்கையில் அசோக்கின் உடலில் இருந்த காயங்கள் விபத்தினால் ஏற்பட்டவை அல்ல என்று உறுதியானது. மேலும், கடைசியாக அசோக் யாரிடம் பேசினார் மற்றும் யாருடன் சென்றார் என்ற விசாரணையின் அடிப்படையில் தேவராஜ் உள்ளிட்ட நான்கு பேரும் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
























