வாணியம்பாடி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரண்
’’கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 6 பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் சரணடைந்த நிலையில் முக்கிய குற்றவாளி இம்தியாஸ் தலைமறைவு’’

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர் வசீம்அக்ரம் (40). சமூக ஆர்வலரான இவர் மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளராக இருந்தார். கடந்த 10 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு ஜீவா நகரில் உளள மசூதியில் தொழுகை நடத்தி விட்டு அவரது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கத்தி, அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டது. சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன சோதனையும், கொலை நடந்த போது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி, கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு நடத்தினர்.

அதில் கொலை நடந்த காட்சிகள் தெளிவாக இருந்தது. கொலையாளிகள் இண்டிகா காரில் வந்து, வசீம் அக்ரமை 6 பேர் கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம், பாலு செட்டி சத்திரம் அருகே உள்ள சோதனை சாவடியில் வந்த காரை, போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் கூலிப்படையை சேர்ந்த பிரசாந்த் (23), தில்லிகுமார் (25), ஆகிய இருவர் கைது செய்தனர். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி இம்தியாஷ் குறித்து வசீம் அக்ரம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததுள்ளார். இதில் 3 பேர் கைது செய்து, அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா, 10 கத்தி, 10 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.

இதனால் இம்தியாசுக்கு, வசீம்அக்ரமுக்கும் முன் விரேதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா வியாபாரி இம்தியாஸ், மனித நேய ஜனநாக கட்சி மாநில துணை தலைவர் வசீம்அக்ரமை கொலை செய்ய முடிவு செய்தால், இக்கொலை நடந்தது என விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து வசீம் அக்ரம் கொலை வழக்கில் போலீசாரால், தேடப்பட்ட வந்த, காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஜான்தாஸ் மகன் அகஸ்டின் (19), பாஸ்கர் மகன் சத்தியசீலன் (20), வண்டலுார் ஒட்டோரி விரிவாக்கத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் பிரவீன்குமார் (20), நாகு மகன் முனீஸ்வரன் (20), மோகனசுந்தரம் மகன் செல்வக்குமார் (21), சென்னை ஊரப்பாக்கம் எபினேசர் மகன் அஜய் (21) ஆகிய ஆறு பேரும் நேற்று மதியம் தஞ்சாவூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற எண்.3ல் நீதிபதி பாரதி முன்பாக, வழக்கறிஞர் மூலம் சரணடைந்தனர். இதையடுத்து 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டதால், திருச்சி சிறைக்கு பலத்த போலீசார் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர். வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயக கட்சி நிர்வாகியை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 6 பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் சரணடைந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முக்கிய குற்றவாளி இம்தியாஸ் தலைமறைவாக இருந்து வருகிறார்.





















