![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
திருவண்ணாமலை: பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 47 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
தானிப்பாடி பகுதியில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 47 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
![திருவண்ணாமலை: பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 47 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் 47 students who ate the food that the lizard had dropped suffered vomiting and fainting and were treated in the hospital TNN திருவண்ணாமலை: பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 47 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/09/2b1aae0fe4de915d33a073ef408941641662691585364109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த மோத்தக்கல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த அரசு பள்ளியில் 608 மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் சத்துணவு அமைப்பாளராக ஏழுமலை என்பவர் பணியாற்றி வருகிறார். சத்துணவு அமைப்பாளர் உடல்நலக்குறைவால் விடுமுறையில் உள்ளார். இந்த நிலையில் மதிய உணவை சமையலர் லட்சுமி, சமையல் உதவியாளர் பல்ஹித் ஆகிய இருவரும் சேர்ந்து சமைத்துள்ளனர். பின்னர் மதியம் மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறி கொண்டிருந்தனர். மதிய உணவை வாங்கி சாப்பிட்ட மாணவர்களின் உணவில் பல்லி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதைகண்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தார். மேலும் மதிய உணவு சாப்பிட்ட 47 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த மற்ற மாணவர்கள் உடனடியாக உணவை சாப்பிடாமல் நிறுத்திவிட்டனர்.
அதனைத்தொடர்ந்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளிக்கு ஓடி வந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு மாணவர்கள் தானிப்பாடி அருகில் உள்ள ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனையில் பதற்றம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பெற்றோர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அங்கு மருத்துவக்குழு வந்துவிட்டதால் சாலைமறியலை கைவிட்டனர். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வினி, மற்றும் கல்வி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் ரெட்டியார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆறுதல் கூறினார்.
மேலும், பெற்றோர்களிடமும் நலமுடன் இருந்த மாணவ, மாணவிகளிடம் நடந்த சம்பவங்கள் குறித்து அவர் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து சமையலர் லட்சுமி, உதவியாளர் பல்ஹித் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் மாணவர்களை கண்காணித்து முழுமையான சிகிச்சைக்கு பின் 100 சதவீத ஆரோக்கியத்தை உறுதி செய்த பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். 6 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை 6-ம் வகுப்பு ரிஷிபாலன், 10-ம் மாணவன் வீரவேல், 7-ம் வகுப்பு மாணவர்கள் பிரகாஷ், போசிக்கண் (14), வினைகுமார் உள்பட 6 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து மருத்துவ குழுவினர் மாணவர்களை கண்காணித்து வருகின்றனர். மாணவர்களின் உணவில் பள்ளிவிழுந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)