படகில் ஏறினார்.. ஆனால் மிஸ்ஸிங்.. காணாமல் போன நடிகை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்!
காணாமல் போன 37 வயது தாய்லாந்து நாட்டு நடிகை இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஆற்றங்கரையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன 37 வயது தாய்லாந்து நாட்டு நடிகை இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஆற்றங்கரையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 37 வயது நடிகை நிடா. இவரது முழுப் பெயர் நிடா டாங்மோ பட்சராவீர்போங். இவர் சினிமாக்களில் மட்டுமல்லாது நிறைய நாடகங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன்னர் ஒரு படகை வாடகைக்கு எடுத்து அதில் தனது ஐந்து தோழிகளுடன் பயணித்துள்ளார். தோன் புரி பாலத்திலிருந்து நோதாபுரி மாகாணத்திற்கு அவர் பயணப்பட்டார். பிப்ரவரி 24 ஆம் தேதி இரவுக்குப் பின்னர் அவரைக் காணவில்லை. இது குறித்து அவரது சகோதரருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து டாவ் ப்ரயா ஆற்றில் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவரது உடல் ஆற்றில் மிதப்பதாக தகவல் கிடைத்தது. நோந்தாபுரி மாகாணத்தில் உள்ள பிபுல்கோங்கிராம் பையர் பகுதியிலிருந்து 300 மீட்டர் தொலைவில் ஒரு சடலம் மிதப்பதாக போலீஸுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீஸார் அப்பகுதிக்கு விரைந்தனர். அவர்கள், அங்கு தீயணைப்பு துறை வீரர்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு சடலத்தை கரைக்கு கொண்டுவந்தனர். டாங்மோவின் சகோதரர் தனது சகோதரியின் நகை, உடைகளை வைத்து அடையாளம் காட்டினார். பிரதேப் பரிசோதனைக்காக உடல் அனுப்பிவைக்கப்பட்டது.
இது குறித்து டோங்மோவின் தோழிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பிப்ரவரி 24 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் டோங்மோ கழிவறை சென்றார். ஆனால் கழிவறை சரியாக பயன்படுத்தக் கூடிய நிலையில் இல்லாததால் படகின் பின்புறம் சென்றார். அங்கமர்ந்தபடி இயற்கைக் கடனை முடிக்கச் சென்றார். ஆனால், அதன் பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து நாங்கள் டாங்மோவின் சகோதரரிடம் கூறினோம் என்றனர். இந்த முதற்கட்ட விசாரணைத் தகவலைப் பகிர்ந்து கொண்ட போலீஸார் பல்வேறு கோணங்களிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
படகுப் பயணத்தின்போது டாங்மோவும் அவரது தோழிகளும் உயிர்க்காக்கும் கவசம் அணியவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் படகு உரிமையாளர் மீதும் போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏனெனில் படகின் உரிமம் காலாவதியாகி பல ஆண்டுகள் ஆகின்றன. எனவே கவனக்குறைவாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்தியதாகக் கூறி படகு உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டாங்மோ மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டாங்மோ, 2006 ஆம் ஆண்டு வெளியான கோஸ்ட் ஆஃப் மே நாக் ‘Ghost of Mae Nak’ படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். 2013ல் அவர் பாகின் கும்விலாய்சுக் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இரண்டே ஆண்டுகளில் இந்தத் தம்பதி பிரிந்தனர்.





















