GST சீர்திருத்தம்: வாகனம் வாங்க வேண்டுமா...? - உடனே புதுச்சேரி செல்லுங்கள் !
GST சீர்திருத்தங்கள் மற்றும் விகிதக் குறைப்பும் இணைந்து, வருவாய் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி வரும் மாதங்களில் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

புதுச்சேரி: ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கு பிறகு புதுச்சேரியில் வாகனப்பதிவு 35 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த சீர்திருத்தங்களின் விளைவாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
GST சீர்திருத்தங்களுக்குப் பின் நுகர்வு அதிகரிப்பு
இந்திய அரசின் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் கடந்த செப்டம்பர் 22-ல் அமலுக்கு வந்தது. புதுச்சேரி வணிக வரித் துறையின் தரப்பில் இந்த சீர்திருத்தங்களின் விளைவாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது பற்றி வணிகவரித்துறை செயலர் மற்றும் ஆணையர் யாசின் சவுதிரி கூறியதாவது.,
செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வந்த இந்திய அரசின் அடுத்த தலைமுறை GST சீர்திருத்தங்கள் இந்தியாவின் மறைமுக வரி முறையின் ஒரு மிகப் பெரிய எளிமைப்படுத்தலைக் குறிக்கிறது. புதுச்சேரி வணிக வரித் துறையின் பகுப்பாய்வில் இந்த சீர்திருத்தங்களின் விளைவாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. புதுச்சேரி அரசின் போக்குவரத்துத் துறையின் விவரங்களின் படி வாகனப் பதிவுகளின் அளவு 35% அதிகரித்துள்ளது. இதில் கார்களின் அளவு மட்டும் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 37% அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகனங்கள் விற்பனை- 35% அதிகரிப்பு, மூன்று சக்கர வாகனங்கள் - 38%, சரக்கு வாகனங்கள் - 53%, பேருந்துகள் -50%).
இதேபோல், முக்கிய பல்பொருள் அங்காடிகளின் FMCG விற்பனை விவரங்களின் படி, மக்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட வகை பொருட்களின் விற்பனை 15% அதிகரித்துள்ளது. சாதாரண மக்கள் தினசரி பயன்படுத்தும் ஹேர் ஆயில் போன்ற பொருட்களில் கூட விற்பனை அளவு 48% அதிகரித்துள்ளது. இதே போல் நெய் மற்றும் பற்பசை விற்பனை முறையே 49% மற்றும் 10% அதிகரிப்பைக் கண்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் GST சீர்திருத்தங்களால் புதுப்பிக்கப்பட்ட நுகர்வோர் நம்பிக்கை மற்றும் அதிக செலவிடும் திறனை குறிக்கின்றது.
வணிக சங்க அமைப்புகள் மற்றும் GST வல்லுநர்களுக்கு தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் இந்த சீர்திருத்தங்களை புதுச்சேரி வணிக வரித்துறை தீவிரமாகவும் சீராகவும் செயற்படுத்தி வருகிறது. வரி விகித குறைப்பின் சீர்திருத்தங்களை முழுமையாக விளக்குதல், வணிகர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை மாற்றங்களை தெளிவுபடுத்துதல் மற்றும் வரி விகிதக் குறைப்பு மற்றும் வர்த்தகத்தை எளிதாக்கும் நடவடிக்கைகள் நுகர்வோரையும் வணிகர்களையும் சென்றடைவதை உறுதி செய்வதில் இந்த முயற்சிகள் கவனம் செலுத்துகின்றன.
GST வரி விகித மாற்றங்களின் பொருளாதார தாக்கத்தை வணிக வரித்துறை தொடர்ந்து கண்காணித்து, குறைந்த வரி விகிதங்களின் பலன் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும். பண்டிகைக் கால விற்பனையும், GST சீர்திருத்தங்கள் மற்றும் விகிதக் குறைப்பும் இணைந்து, வருவாய் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி வரும் மாதங்களில் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரான வளர்ச்சியை தக்கவைக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் வெளிப்படைத்தன்மை மூலம் அனைத்து தரப்பினருடன் தொடர்ந்து ஈடுபட வணிக வரித்துறை உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





















