Gold Rate Today (13-11-2025): விண்ணை முட்டும் தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்வு
Gold Rate Today Chennai 13-11-2025: இன்று காலையில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.800 அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு சவரன் ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்கம் ஒரே நாளில் அதிரடியாக இரண்டு முறை மாற்றம் கண்டுள்ளது. அதன்படி இன்று (நவம்பர் 13) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்தது. இன்று காலையில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.800 அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு சவரன் ரூ.95,200க்கும், ஒரு கிராம் ரூ.11,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் நடுத்தர மக்களை மிகவும் அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இந்த தகவல் எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது.
கனவாக மாறும் தங்கம்
தங்கத்தின் மீது மிகப்பெரிய மதிப்பு என்பது அனைவருக்கும் உள்ளது. தங்க நகைகளை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி அணிகின்றனர். இப்படியான நிலையில் தங்கம் விலை நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. ஒரு காலத்தில் தங்கம் மிகச்சிறந்த முதலீடு என்ற நிலையில், இன்று அதற்கான சேமிப்பு என்பது கனவாக மாறி விட்டது. அதிகரிக்கும் தேவை, சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்காவின் வர்த்தகப்போக்கு ஆகியவை அடிப்படையாக கொண்டு தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் என்பது கலாச்சாரம் தொடர்புடைய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இங்கு எந்த நல்ல காரியம் என்றாலும், நல்ல நாள் என்றாலும் வாங்கும் முதல் பொருள் தங்கமாகும். தங்கம் விலை மதிப்புமிக்க பொருள் என்பதைக் காட்டிலும் இது இன்றளவும் கஷ்ட காலங்களில் பல ஏழைக் குடும்பங்களின் இன்னல் தீர்க்க அடமானம் வைக்கவும் பயன்படுகிறது. பிற ஆபரணங்களை அவ்வளவு எளிதில் விற்பனை செய்து தேவைப்படும் அளவுக்கு பணம் பெற முடியாது. இதனால் தங்கத்தின் மீது மிகப்பெரிய அளவில் நாட்டம் மக்களுக்கு உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை டிசம்பர் 15ம் தேதி வரை திருமண சீசனாகும். கார்த்திகை மாதம் என்பது ஏகப்பட்ட திருமணங்கள் நடைபெறும். இதனால் மக்கள் நகைகள் வாங்க நகைக்கடைகளுக்கு சென்று வருகின்றனர். எனினும் விண்ணை முட்டும் விலை உயர்வால் விழி பிதுங்கியுள்ளனர். என்னதான் நகைக்காக மாதாந்திர சேமிப்பு வைத்தாலும் அதனைக் கொண்டு கணக்கிடப்பட்ட அளவில் நகை வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்து காணப்படுகிறது.
பொருளாதாரம் நிலையான தன்மையில் இல்லாதபோது தங்கம் விலை உயர்வு என்பது வழக்கமான ஒன்று தான் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 1970 களின் இருந்து கணக்கிட்டால் தங்கம் விலை கிட்டதட்ட 700 மடங்கு உயர்துள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு முன் கடுமையாக உயர்ந்த தங்கம் விலை அதன் பின்னர் சரசரவென குறையத் தொடங்கியது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சியடைந்த நிலையில் மீண்டும் எட்டாக்கனியாகவே மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















