Budget 2026 Expectations: குவியும் இவி பேட்டரி கழிவுகள்.. மறுசுழற்சி அவசியம்! பட்ஜெட்டில் சிறப்பு மானியம் கிடைக்குமா?
2026 பட்ஜெட் மூலம் முறையான கொள்கைகளை வகுத்தால், இந்தியா சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பேட்டரி மூலப்பொருட்களுக்கான இறக்குமதிச் சுமையைக் குறைத்து தற்சாரபு அடையவும் வழிவகுக்கும்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு மிக வேகமான வளர்ச்சியை எட்டி வருகிறது. குறிப்பாக 2030-ஆம் ஆண்டிற்குள் இருசக்கர வாகன சந்தையில் 30 சதவீதமும், மூன்று வாகன சந்தையில் 50 சதவீதத்திற்கும் மேலாகவும் மின்சார வாகனங்கள் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு சக்கர வாகனப் பிரிவு தற்போது 5 சதவீத அளவில் இருந்தாலும், ஆண்டுக்கு 85 முதல் 90 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
இந்த அசுர வளர்ச்சியின் மறுபக்கமாக, 2030-ஆம் ஆண்டிற்குள் பேட்டரி கழிவுகளின் அளவு 128 ஜிகாவாட் ஹவர் (GWh) என்ற அளவைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பயன்பாடு முடிந்த மின்சார வாகனங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவை மட்டுமே தற்போது முறையான மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. பேட்டரி மறுசுழற்சிக்கான வலுவான கட்டமைப்பு இல்லாவிட்டால், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நாம் முன்னெடுக்கும் இந்த மாற்றம், புதியதொரு சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக மாறும் அபாயம் உள்ளது.
இந்தியாவின் மறுசுழற்சி தயார்நிலை
இந்தியாவின் மறுசுழற்சி தயார்நிலையைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு 50,000 டன்களுக்கும் அதிகமான பேட்டரிகளை மறுசுழற்சி செய்யும் திறன் நம்மிடம் இருந்தாலும், அதில் 20 முதல் 25 சதவீதத் திறன் மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகிறது. 2022-ஆம் ஆண்டின் பேட்டரி கழிவு மேலாண்மை விதிகள் (BWMR) உற்பத்தியாளர்களுக்குப் பொறுப்புகளை வழங்கினாலும், இன்னும் முறைசாரா மறுசுழற்சி நிறுவனங்களே இத்துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
சர்வதேச எரிசக்தி முகமை (IEA) எச்சரிப்பது போல, முறையான நிதி மற்றும் தொழில் கொள்கைகள் இல்லாவிட்டால், பேட்டரி மறுசுழற்சியில் இந்தியா பின்தங்க நேரிடலாம். சமீபத்தில் சுரங்க அமைச்சகம் பேட்டரி மூலப்பொருட்களை மீட்பதற்கான மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது ஒரு நல்ல தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
மறுசுழற்சி துறையில் உள்ள முட்டுக்கட்டைகள்
மறுசுழற்சி துறையில் உள்ள முக்கிய சிக்கல்களில் ஒன்று, பேட்டரிகளிலிருந்து முழுமையான மூலப்பொருட்களை எடுப்பதற்குப் பதிலாக, இடைநிலை பொருளான 'பிளாக் மாஸ்' (Black Mass) எடுப்பதோடு பல நிறுவனங்கள் நிறுத்திக் கொள்கின்றன. மேலும், பேட்டரிகளைச் சேகரிப்பதற்கான முறையான மையங்கள் இல்லாததால், பழைய பேட்டரிகளைத் ஒன்று சேர்ப்பது என்று சவாலாக உள்ளது.
பொருளாதார ரீதியாகப் பார்க்கும்போது, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைக் காட்டிலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லித்தியம் மற்றும் கோபால்ட் மலிவாகக் கிடைப்பதும், மறுசுழற்சி செய்வதற்கான அதிகப்படியான செலவும் இத்துறையின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. சீனா போன்ற நாடுகளில் நஷ்டம் ஏற்பட்டாலும் மூலோபாய ரீதியாக மறுசுழற்சி ஊக்குவிக்கப்படுகிறது. அதுபோன்ற ஒரு நிதிச் சமன்பாட்டுத் திட்டம் இந்தியாவிற்கும் அவசியமாகிறது.
என்ன தீர்வுகள் கிடைக்கலாம்?
இந்தச் சூழலில், 2026-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் இத்துறைக்கு ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் நடைமுறைகளைப் பின்பற்றி, பேட்டரிகளின் வாழ்நாளைக் கண்காணிக்கும் 'டிஜிட்டல் பேட்டரி பாஸ்போர்ட்' முறை மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவோருக்கு வரிச் சலுகை போன்ற திட்டங்களை இந்தியா அறிமுகப்படுத்தலாம். மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட மூலப்பொருட்களுக்கு நேரடி மானியம் வழங்குவதுடன், 'பசுமை உள்கட்டமைப்பு பத்திரங்கள்' மூலம் இத்துறைக்கான நிதியைத் திரட்டலாம். பேட்டரி மறுசுழற்சிக்கான ஒரு பிரத்யேக 'சிறப்பு மையத்தை' (Centre of Excellence) அமைப்பதன் மூலம் நவீன தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே உருவாக்க முடியும். மொத்தத்தில், 2026 பட்ஜெட் மூலம் முறையான கொள்கைகளை வகுத்தால், இந்தியா சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பேட்டரி மூலப்பொருட்களுக்கான இறக்குமதிச் சுமையைக் குறைத்து தற்சாரபு அடையவும் வழிவகுக்கும்.
























