Budget 2026: தங்கம் விலை தாறுமாறாக குறையுமா? மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா நிர்மலா சீதாராமன்?
Budget 2026 Expectations: நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ள தங்கத்தின் விலையை கட்டுப்படுத்தும் அறிவிப்பு பட்ஜெட்டில் வருமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தியாவில் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பொருளாதாரத்திலும், சேமிப்பிலும் முக்கிய பங்கு வகிப்பது தங்கம் ஆகும். பல நெருக்கடியான தருணங்களில் இந்தியாவின் லட்சக்கணக்கான குடும்பங்களை நெருக்கடியான சூழலில் காப்பாற்றிய மற்றும் காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக திகழ்வது தங்கம்.
உச்சாணிக் கொம்பில் தங்கம்:
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை என்பது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. கொரோனாவிற்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், உலகின் சில நாடுகள் இடையே அவ்வப்போது நீடித்து வரும் சண்டை காரணமாக பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதே தொடர்ந்து முதலீட்டை செலுத்தி வருகின்றனர்.
இதனால், இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த 2022ம் ஆண்டு 10 கிராம் ( 24 காரட்) ரூபாய் 52 ஆயிரத்து 670க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூபாய் 1.50 லட்சத்திற்கும் அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. இன்றைய நிலையில், சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 22 காரட் ரூபாய் 14 ஆயிரத்து 900 ஆகும். ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 1 லட்சத்து 19 ஆயிரத்து 200 ஆகும்.
முடிவுக்கு கொண்டு வருவாரா நிர்மலா சீதாராமன்?
ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 1 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவது சாமானிய மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் என்பது நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நிறைவேறாத கனவாக ஒவ்வொரு நாளும் மாறி வருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி இல்லையா? என்று மக்கள் ஏங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ள மத்திய நிதிநிலை அறிக்கையில் தங்கம் விலை குறைப்பு குறித்து ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை மீதான சுங்கவரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. இதனால், தங்கம் விலை அப்போது சற்று குறைந்தது.
ஏங்கி நிற்கும் மக்கள்:
தற்போது லட்ச ரூபாயைக் கடந்து நிற்கும் தங்கம் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு ஏதேனும் வரி குறைப்பு அறிவிப்பை பட்ஜெட்டியில் வெளியிடுமா? என்ற பெரும் ஏக்கம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் எட்டாக்கனியாக உருமாறியுள்ள தங்கம் இனிமேல் எப்போதுமே எட்டாத கனியாக மாறிவிடும் அபாயம் உருவெடுத்துள்ளது.
இதனால், நாளை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள இந்த பட்ஜெட் மீது நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















