Rasi Palan Alert : ‘உங்க ராசி இதுவா?’ 5 ராசிக்கு எச்சரிக்கை – அலெர்ட் செய்யும் கிரகங்கள்..!
’ஆனி மாதத்தில் பல ராசிகளுக்கு நல்லது நடந்தாலும் சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையை கிரகங்கள் உணர்த்தியுள்ளன’

ரிஷப ராசிக்காரர்களே..!
ஆனி மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டியவர் நீங்கள். தலையை மீறி செலவுகள் செல்லும். சரியாக திட்டமிட்டு செலவு செய்யுங்கள். வீண் செலவுகளை தவிர்ப்பது மிக நல்லது. அதே நேரத்தில் உடல் ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்களும் இந்த மாதம் வந்து சேரும் வகையில் கிர நிலைகள் இருக்கின்றன. அதனால் உங்களின் ஆரோக்கியத்தை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். சாப்பாடு உள்ளிட்ட விஷயங்களில் கவனமாக இருங்கள். இல்லையென்றால் வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. முயற்சிகள் பலிப்பதில் சற்று தடுமாற்றம் இருக்கும். ஆனால், தளர்வின்றி வேதாளம் முருங்கை மரம் ஏறுவதுமாதிரி சோர்வின்றி தொடர்ந்து முயற்சித்தால், உங்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்துவிடலாம் என்ற எண்ணத்தில் மண் அள்ளிப்போடும் மாதம் இது. ஆனால், முயன்றால் முடியாதது இல்லை.
பிரச்னைகள் இருந்தாலும் பிரார்தனைகள் மூலம் நல்ல சேதிகள் உங்களை தேடி வர வைக்கலாம். உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தை தினமும் வணங்குங்கள். குல தெய்வ வழிபாடு சிறப்பு சேர்க்கும்.
கடக ராசிக்காரர்களே..!
கவனம், கவனம், கவனம். இதுதான் ஆனி மாதம் உங்களுக்கு கொடுக்கும் எச்சரிக்கை. குடும்ப பிரச்னைகளை இந்த மாதம் பெரிதாக்காதீர்கள். யார் என்ன பேசினாலும் அதற்கு அமைதியாக பதிலளித்து கடந்தச் செல்ல முயற்சியுங்கள். அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார் ராகு. வழக்கமான உணவுகளை தவிர்த்து புதிய வகை உணவுகளை சாப்பிட வாய்ப்பு வந்தாலும் சாப்பிடாதீர்கள். உங்கள் உடல் நலத்திற்கு உலை வைக்கும் மாதமாக இருக்கிறது இந்த ஆனி. நீங்கள் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை இயக்கும்போது இந்த மாதம் செல்போனை உபயோகிக்கவே உபயோகிக்காதீர்கள். அது மிகப்பெரிய சிக்கலை உங்களுக்கு ஏற்படுத்திவிடும். அவசரமாக பேசவேண்டிய கட்டாயம் இருந்தாலும் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பேசுங்கள். உங்களுக்கு வரும் அழைப்பு உங்கள் உடல் உறுப்புகளுக்கு உலை வைக்கும் அழைப்பாக கூட இருக்கலாம்.
கடந்த நாட்களை விட செலவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் அதிர்ஷ்ட காற்றும் உங்கள் பக்கம் அடிக்க வாய்ப்பிருக்கிறது. வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டால் வளங்கள் குவியும்.
சிம்ம ராசிக்காரர்களே..!
நீங்களும் உங்கள் உடல்நலனிலும் உங்கள் குடும்பத்தினர் உடல்நலனிலும் இந்த மாதம் சற்று கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல், வாங்கல் பிரச்னைகள் இருந்தால் இந்த மாதம் அதில் சற்று கவனத்துடனும் அமைதியுடனும் இருந்து அதை சரி செய்யுங்கள். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எந்த காரியத்தை இந்த மாதம் செய்ய வேண்டாம். அதற்காக இந்த மாதம் எதற்கும் ஆகாது என்று வாய்பந்தல் போட்டுவிட்டு, வருத்தப்பட்டு இருந்துவிட வேண்டாம். எடுக்கும் முயற்சிகளை எடுங்கள்.
குல தெய்வ வழிபாடு நன்மைகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். நாள்பட்ட வேண்டுதல்கள் இருந்தால் அதனை இந்த மாதத்திலேயே நிறைவேற்றுங்கள். வேண்டுதல்கள் வேண்டுவன கொடுக்க வல்லவை.
கன்னி ராசிக்காரர்களே..!
குணம் இருக்கும் இடத்தில்தான் கோபம் இருக்கும் என்ற சொல்லாடலுக்கு சாலப்பொறுத்தமானவர் நீங்கள். ஆனால், இந்த மாதம் நீங்கள் கொஞ்சம் கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்த்து சுமூகமாக செல்ல முயற்சியெடுங்கள். நீங்கள் சும்மா இருந்தாலும் உங்களை தேவையில்லாமல் சீண்டி உங்கள் வாயை உங்கள் குடும்பத்தினரே பிடுங்க பார்ப்பார்கள். அதற்கெல்லாம் சோடை போய்விடாமல் பிரச்னைகள் தலைதூக்கும்போது அரைநாளாவது மவுனவிரதத்தை கடைபிடிப்பதுபோல இருந்துவிடுங்கள். அதே நேரத்தில் உடல் ஆரோக்கியதில் சிக்கல், பண விரயம் என கொஞ்சம் சிக்கலான கிரக நிலைகளில் சிக்கியிருக்கின்றீர்கள் நீங்கள்.
நீங்கள் சின்னாபின்னமாகாமல் தடுப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. சின்ன பிள்ளை மாதிரி பொசுக்கு பொசுக்கென கோபிக்காமல், பெருந்தன்மையாக நடந்துகொண்டால் நல்லது நடக்கும். பிறர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதை இந்த மாதத்திலாவது கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். இல்லையென்றால், நீங்கள்தான் மூக்கறுப்பட்டு நிற்கவேண்டும்.
தனுசு ராசிக்காரர்களே..!
சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு என்ற அதிரடியான ஆள் நீங்கள். தப்புண்ணே.. என தெனாவெட்டு ஜீவா மாதிரி இந்த மாதம் உறுமிக்கொண்டிருக்காமல், பாதி உறக்கத்தில் உழல்பவர் மாதிரி உம்மென்று இருங்கள். இந்த மாதம் உங்களுக்கு கொஞ்சம் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதிலும் செலவுகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய வேண்டியவர் நீங்கள். சுக ஸ்தானத்தில் சனியும், அஷ்டமத்தில் குரு – சுக்கரனும் நாற்காலியை போட்டு நங்கூரமாக உட்கார்ந்திருக்கிறார்கள். அதனால், தேவையற்ற செலவுகள் என்று உங்கள் மனதில்படும் செலவுகளை செய்யவே செய்யாதீர்கள். செய்தீர்கள் என்றால் பின்னர் வருத்தப்படப்போவதும் நீங்கள்தான். வேலைபார்க்கும் இடத்தில் இந்த மாதம் முழுவதும் தேவையற்ற பேச்சுகள் பேசாமலும், புரணிகள் புரளும் இடங்களுக்கு செல்லாமலும் இருப்பது உங்களுக்கு ரொம்ப நல்லது. இல்லையென்றால் வதந்திகள் உங்கள் மீது வண்டிக் கட்டி ஏறி மிதிக்கும் ஏற்றம் இருக்கிறது.
பிறரின் பிரச்னைகளில் தலையிடுவது, இன்னொருவருக்கான ஜாமீன் கையெழுத்து போடுவெதெல்லாம் இந்த மாதம் வேண்டாம். உங்களை உண்டு இல்லையென்று ஆக்கும் நோக்கில் கிரகங்கள் நர்த்தனமாடிவருவதால், நல்லதையே நினைத்து, நல்லவர்களுடன் மட்டும் பழகி, நல்லதையே செய்யுங்கள். உங்களின் நலத்திற்காக உங்களுக்கு பிடித்தமான தெய்வத்தை தினந்தோறும் வீட்டில் வழிபடுங்கள். வாய்ப்பிருந்தால் கோயிலுக்கு சென்று மூலவரை வழிபட்டு கொடிமரத்தையும் வழிபட்டு வாருங்கள். வளம் வந்துச் சேரும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















