பீகாரின் 25 வயது பாஜக MLA பாடகி To அரசியல்வாதி யார் இந்த மைதிலி தாக்கூர்? | Bihar | Maithili Thakur
25 வயதில் ஒரு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்... அதுவும் பிரபல இசைக்கலைஞராக இருந்து அரசியலில் குதித்து சாதனை படைத்த இந்தியாவின் இளம் தலைமுறையின் பெருமையாகப் பேசப்படும் பாடகி மைதிலி தாகூர். இசைக் கச்சேரிகளில் ஒலித்த அவரது குரல், இப்போது சட்டமன்றத்தில் மக்களின் குரலாக ஒலிப்பதன் பின்னணி என்ன? ஒரு நாட்டுப்புறப் பாடகி எப்படி திடீரென அரசியலில் இந்த உயரத்தை எட்டினார்?
2000 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி மதுபானி மாவட்டத்தில் பிறந்த மைதிலி தாகூர் பாரம்பரிய இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது 4 வயதில் தாத்தா மற்றும் தந்தையிடம் இருந்து நாட்டுப்புற மற்றும் இந்துஸ்தானி இசையைக் கற்க தொடங்கினார். 6 வயதில் மகளின் திறமையை அறிந்த மைதிலியின் தந்தை ரமேஷ் தாகூர் பீகாரில் இருந்து டெல்லியில் துவாரகாவிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 10 வயது முதல் மேடை நிகழ்ச்சிகள் மற்றும் இசை விழாக்களில் மைதிலி பாட தொடங்கினார். டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஏஆர்.எஸ்.டி கல்லூரியில் இசை பயிற்சி முடித்தார். தொடர்ந்து தனது சகோதரர்களுடன் இணைந்து போஜ்புரி மொழியில் நாட்டுப்புற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பின்னர் ஜி டிவி, சோனி டிவியில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சியில் தோன்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
11 வயதில் 'ச ரி க ம ப லிட்டில் சாம்பியன்ஸ்', 15 வயதில் இந்தியன் ஐடல் ஜூனியர் போன்ற இசை ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார். ஆனால், இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது 2017-ஆம் ஆண்டு நடந்த ரைசிங் ஸ்டார் நிகழ்ச்சிதான். இதில் இறுதிச் சுற்றில் இவர் ரன்னர்-அப் ஆக வந்தபோது, ஒட்டுமொத்த தேசமும் இவரது திறமையைக் கண்டு வியந்தது. ரியாலிட்டி ஷோக்களுக்குப் பிறகு, மைதிலி தனது சகோதரர்கள் ரிஷவ் மற்றும் அயச்சி ஆகியோருடன் இணைந்து பாடல்களை யூடியூபில் வெளியிடத் தொடங்கினார். இவர்களது கூட்டுழைப்பில் உருவான பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல்கள், பஜன்கள் மற்றும் பக்திப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
மைதிலியின் YouTube சேனலுக்கு இன்று 5 மில்லியனுக்கும் அதிகமான ஃபலோவர்ஸ் உள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த மைதிலி தாகூர் பீகாரின் இசை பாரம்பரியத்தை பாதுகாப்பவர் என கூறப்படுகிறார். 2019ம் ஆண்டு அவரும், அவருடைய சகோதரர்களும் தேர்தல் ஆணையத்தால் மதுபானி கலையின் பிராண்ட் அம்பாசிடர்களாக நியமிக்கப்பட்டனர் என தன் வாழ்க்கையில் இளம் வயதிலேயே மைதிலி தாகூர் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டவர்.
2024-ஆம் ஆண்டில், கௌரவமிக்க National Creators Award விருதை இந்தியப் பிரதமரிடம் இருந்து பெற்று, தனது புகழை உச்சத்துக்கு கொண்டு சென்றார். எல்லோரும் இவரை ஒரு வெற்றிகரமான பாடகியாக மட்டும் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், மைதிலி எடுத்த அடுத்த முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு 3 மாதங்கள் இருந்தபோது வரவிருக்கும் தேர்தலில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவேன் என அறிவித்தார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. காரணம் அப்போது அவர்பாஜகவில் இணையவே இல்லை. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 15ம் தேதி பிஹார் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் அலிநகர் தொகுதியில் பாடகி மைதிலி தாகூருக்கு சீட் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒருநாள் முன்னர் தான் அவர் தன்னை பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார். மைதிலி தாகூர் பீகார் தேர்தலில் நட்சத்திர முகமாக இருப்பார் என பாஜக கணித்திருந்தது. கட்சியில் சேர்ந்த ஒருநாளில் அவருக்கு எம்.எல்.ஏ. சீட் வழங்கப்பட்டது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது.
அரசியல் அனுபவம் இல்லாத ஒரு பாடகிக்கு வெற்றி கிடைக்குமா என்ற கேள்வி பலரிடமும் இருந்தது. ஆனால், மைதிலியின் செல்வாக்கும், மக்களின் அன்பும் அவருக்கான வரலாற்றைப் படைத்தது. அலிநகர் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினரான பினோத் மிஸ்ராவை விட 11,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்று, தனது 25 வயதில் பீகார் சட்டமன்றத்தின் மிக இளைய எம்.எல்.ஏ. என்ற சரித்திரச் சாதனையைப் படைத்துள்ளார் மைதிலி தாகூர்..
முன்னதாக மைதிலி அளித்த பேட்டி ஒன்றில், நாட்டுப்புற பாடகியான தான் பல பாஜகவின் கலாச்சார நிகழ்ச்சிகளில் பக்தி பாடல்கள் பாடியிருக்கிறேன். அதனால் அந்த கட்சியின் தலைவர்களை எனக்கு நன்றாக தெரியும். அதனால் அலிநகர் தொகுதியில் போட்டியிட சொன்னபோது என்னால் மறுக்க முடியவில்லை என தெரிவித்திருந்தார். நிச்சயம் நான் எம்.எல்.ஏ. ஆனதும் பெண் குழந்தைகள் கல்விக்காகவும், இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காகவும் ஏதாவது செய்வேன் என உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது..






















