சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
மதுரையில் 17 வயது சிறுமிக்கு அவர் வேலை செய்யும் கடைக்குள் நுழைந்து இளைஞர் தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸைக் கண்டதும் தப்பியோடிய அந்த இளைஞர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் பேன்சி கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாரி என்ற 23 வயது இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறி உள்ளது.
இந்த நிலையில் அந்த இளைஞர் நேற்று சிறுமி வேலைசெய்யும் கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் இருந்த மற்ற பணியாளர்கள் வெளியே சென்றிருந்ததால், சிறுமி மட்டும் பணியில் இருந்தார்.
பின்னர், கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் வெளியே சென்றவுடன், சிறுமி அந்த இளைஞரின் அருகில் சென்று சிறுமிபேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த தாலிக்கயிறை எடுத்து சிறுமியின் கழுத்தில் கட்டிவிட்டு, அங்கேயே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் கடைக்கு வந்த ஊழியர் ஒருவர் இந்தச் சம்பவத்தை கண்டு உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு தெரிவித்தார்.
அதன்பின்னர் அங்கு வந்த பெற்றோர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றபோது, அங்கே ரோந்து பணிக்காக வந்திருந்த சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாரைக் கண்டு அவர்களிடம் நடந்த சம்பவத்தைக் கூறினார்கள்.
அதைத்தொடர்ந்து, சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அவர்கள் வருவதைக் கண்ட இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் அங்கிருந்து சிறுமியை அழைத்துச் கூட்டிச் சென்ற சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸார், அவரை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், தப்பியோடிய இளைஞரை கண்டுபிடித்துக் கைதுசெய்த போலீஸார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர்.
பெண்களுக்கெதிரான குற்றச்சம்பவங்கள் நாள்தோறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், 17 வயது சிறுமிக்கு அவர் வேலை செய்யும் கடையிலேயே இளைஞர் தாலி கட்டிய சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















