4 Year Old boy Rescued |30 அடி போர்வெல் குழி!9 மணி நேர போராட்டம்..உயிருடன் சிறுவன் மீட்பு
பஞ்சாபில் 4 வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது திறந்து கிடந்த போர்வெல் குழியில் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சுமார் 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் ஹோசியர்பூரை சேர்ந்த ஹரிந்தர் ஆஷா எனும் கூலித் தொழிலாளர்களின் மகன் குர்கரன் சிங். 4 வயது சிறுவனான குர்கரன் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அவர்கள் வீட்டில் அருகே மூடப்படாத போர்வெல் குழி ஒன்றில் சிறுவன் தவறுதலாக விழுந்துள்ளார். சுமார் 30 அடி ஆழத்தில் சிறுவன் குர்கரன் சிக்கியிருந்த நிலையில், மீட்புபடையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
30 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவன் பதற்றமடையாமல் இருக்க அவரது தாய் தொடர்ந்து சிறுவனுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருந்துள்ளார். மீட்புப்படையினர் போர்வெல் குழியின் அருகே 30 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி சுமார் 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனை பத்திரமாக மீட்டனர்.வெள்ளிக்கிழமை மாலை குழியில் விழுந்த சிறுவன் சனிக்கிழமை மதியம் 12.40 மணி அளவில் மீட்கப்பட்டுள்ளார்.
போர்வெல் குழியில் இருந்து மீட்கப்பட்ட போது உடல்முழுவது மண் படர்ந்து சிறுவன் வெளியே எடுக்கப்பட்ட காட்சிகள் காண்போரை கலங்க வைத்துள்ளது. சிறுவன் மீட்கப்பட்ட உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















