”நீ நினைக்கிறது நடக்காது” மௌனம் கலைத்த மாதம்பட்டி! ஜாய் க்ரிசில்டாவுக்கு பதிலடி
ஜாய் க்ரிசில்டா விவகாரத்தில் முதல்முறையாக மௌனம் கலைத்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். ஜான் க்ரிசில்டா எதிர்பார்ப்பது நடக்காது என அறிக்கையில் மறைமுகமாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா குற்றம்சாட்டினார். ன்னை கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்ட ரங்கராஜ் தற்போது சேர்ந்து வாழ மறுப்பதாக புகார்களை அடுக்கினார். ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி ரங்கராஜிற்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் முறையாக விவாகரத்து பெறாமலேயே அவர் ஜாய் கிரிஷில்டாவுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
ஜாய் க்ரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார்களை அடுக்கும் போது அவர் தனது மனைவி ஸ்ருதியுடன் வெளியே தலைகாட்ட ஆரம்பித்தார். தனது குழந்தைக்கு ரங்கராஜ் தான் அப்பா என சொல்லி இருவரும் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் ஜாய்.
தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் நீதிமன்றம் சென்றுள்ளார். அதே நேரத்தில் மகளிர் ஆணையத்தில் ஜாய் புகார் அளித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பிய நிலையில் அவர் நாளை ஆஜராகவுள்ளார்.
இந்த விவகாரத்தில் இத்தனை நாட்களாக வாய் திறக்காத மாதம்பட்டி ரங்கராஜ் முதல்முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”நீதிமன்றத்திற்கு வெளியே திருமதி ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதையும் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன். இந்தப் பிரச்சினை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ, ஊக்குவிக்கவோ அல்லது பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை. ஆன்லைன் ஊடகங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல்நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன். எனது நலனில் அக்கறை காட்டி, எனக்கு உறுதுணையாக இருந்து, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகள் வழங்கிய அனைத்து நலன்விரும்பிகளுக்கும், எனது இதயபூர்வமான நன்றி” என தெரிவித்துள்ளார்.





















