MS Dhoni IPL: இக்கட்டான நிலையில் சிஎஸ்கே.. எப்போது களமிறங்குகிறார் தோனி? வந்தது அப்டேட்
தசைப்பிடிப்பு காரணமாக ஓய்வில் இருக்கும் தோனி எப்போது மீண்டு வருவார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி களம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2026 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப கட்டத்திலேயே பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசன் சற்று சவாலாகவே தொடங்கியுள்ளது. தொடர் தோல்விகளால் துவண்டுள்ள சிஎஸ்கே அணி, தனது நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறது.
தற்போது தசைப்பிடிப்பு காரணமாக ஓய்வில் இருக்கும் தோனி எப்போது மீண்டு வருவார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. எனினும், பிரபல பத்திரிகையாளர் ரோஹித் ஜுக்லான் கூற்றுப்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி களம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் போட்டி
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வரும் ஏப்ரல் 18, 2026 அன்று சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில்தான் தோனி மீண்டும் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலோங்கியுள்ளது. அதற்கு முன்னதாக ஏப்ரல் 11 அன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியையும், ஏப்ரல் 14 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் சென்னை எதிர்கொள்கிறது. டெல்லிக்கு எதிரான போட்டி சென்னைக்கு சவாலாக இருக்கும் அதே வேளையில், கொல்கத்தா அணிக்கும் இது வாழ்வா சாவா போராட்டமாகவே அமையும். ஏனெனில் இரு அணிகளுமே இந்தத் தொடரில் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய வீரர்களின் காயம் மற்றும் அணியின் சூழல்
தோனி இல்லாதது ஒருபுறம் கவலையை ஏற்படுத்தினாலும், அணியின் மற்றொரு முக்கிய வீரரான தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் டெவால்ட் ப்ரெவிஸும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு இறுதிப் லீக் போட்டிகளில் அதிரடி காட்டிய அவர், இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இது சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் ஒரு சிறிய இடைவெளியை உருவாக்கியுள்ளது. காயத்திலிருந்து மீண்டு வரும் இவர்களது வருகை மட்டுமே சிஎஸ்கே அணியின் வெற்றிப் பாதைக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
சஞ்சு மீதான விமர்சனங்களும் எதிர்பார்ப்புகளும்
தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியவர் சஞ்சு சாம்சன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து இந்த சீசனில் சென்னைக்கு மாறிய அவர், இதுவரை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் தொடக்க வீரராகக் களமிறங்கி, மூன்று போட்டிகளில் வெறும் 22 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற ஒரு வீரர், ஐபிஎல் தொடரில் இவ்வாறு தடுமாறுவது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. வரும் போட்டிகளில் சஞ்சு சாம்சன் தனது பழைய ஃபார்முக்கு திரும்புவாரா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















